திருவொற்றியூரில் மீன்பிடி துறைமுகம்: அடிக்கல் நாட்டினார் அமைச்சர் ஜெயக்குமார்

திருவொற்றியூர் குப்பத்தில் அமைக்கப்பட உள்ள மீன்பிடி துறைமுகத்துக்கு தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று அடிக்கல் நாட்டினார்.
திருவொற்றியூரில் மீன்பிடி துறைமுகம்: அடிக்கல் நாட்டினார் அமைச்சர் ஜெயக்குமார்

திருவொற்றியூர் குப்பத்தில் அமைக்கப்பட உள்ள மீன்பிடி துறைமுகத்துக்கு தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று அடிக்கல் நாட்டினார்.

இது குறித்து தமிழக அரசு தெரிவித்திருப்பதாவது,  தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுர் ஆகியவை சுமார் 134 கி.மீ, தூரம் நீளம் வங்காள விரிகுடா கடல் பரப்பின் ஓரம் அமைந்துள்ளன. இம்மூன்று மாவட்டங்களிலிருந்தும் இலட்சக்கணக்கான மக்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்றனர். இவர்களுக்காக 1980 ல் சென்னை காசிமேட்டில் 570 படகுகளை கையாளும் விதமாக மீன்பிடிதுறைமுகம் ஏற்படுத்தப்பட்டது.

தற்போது இந்த காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 2000 விசை படகுகளும் சிறிய படகுகளும் தினமும் கையாளப்படுகின்றன. இதனால் இங்கு அதிக அளவில் இட நெருக்கடி ஏற்படுகிறது. மேலும் இத்துறைமுகத்திலிருந்து அண்மை கடல் மற்றும் ஆழ்கடல் மீன்பிடி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

குறிப்பாக ஆழ்கடல் மீன்பிடிப்பால் சூரை வகை மீன்கள் அதிக அளவில் கிடைக்கின்றன. இவற்றிற்கு அதிகப்படியான ஏற்றுமதி தேவைகள் உள்ளன. எனவே, ஆழ்கடல் மீன்பிடி தொழிலை ஊக்கப்படுத்தவும் சூரை வகை மீன்களை அதிக அளவில் பிடித்து ஏற்றுமதி செய்திடவும், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தின் இட நெருக்கடியை குறைந்திடவும் தமிழக முதல்வர் பழனிசாமி, 110 விதியின் கீழ் 06.06.2018 அன்று சட்டப் பேரவையில் ரூ.200.00 கோடி மதிப்பீட்டில் சென்னை திருவொற்றியூர் குப்பத்தில் சூரை மீன்பிடி துறைமுகம் ஏற்படுத்தப்படும் என அறிவித்தார்கள்.

இதனை தொடந்து தற்போது மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி திட்டத்தின் மூலம் சூரை மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கு அரசாணை வழங்கி இன்று 11.09.2019 மீன்வளத்துறை, பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் மூலம் 849 மீ நீளம் தெற்கு அலை தடுப்பு சுவர், 550 மீ நீளத்திற்கு வடக்கு அலை தடுப்பு சுவர், 550 மீ நீளம் கொண்ட பெரிய மற்றும் சிறிய படகு அணையும் தளமும், 550மீ நீளம் கொண்ட தடுப்பு சுவர், 163 சதுர மீட்டரில் மீன்பிடி துறை நிர்வாக கட்டடமும், 258 ச.மீட்டரில் வலை பின்னும் கூடமும், 300 சதுர மீட்டரில் சிறு மீன்கள் ஏலக்கூடமும், 765 சதுர மீட்டரில் ஆழ்கடல் மீன் ஏல விற்பனை கூடமும், 1103 ச.மீட்டரில் பதப்படுத்துதல் கூடமும், 100 ச.மீட்டரில் படகுகள் பழுது பார்க்கும் கூடமும், 177 ச.மீட்டரில் மீனவர்களின் பொருட்களை பாதுகாக்கும் இடமும், 36 ச.மீட்டரில் பெண்கள் மற்றும் ஆண்கள் சுகாதார மையமும், 2600 ச.மீட்டரில் சூரை படகுகளுக்கான சாய்வு தளமும், 138 ச.மீட்டரில் உணவகமும், 27 ச.மீட்டரில் பாதுகாவலர் அறையும், 218 ச.மீட்டரில் மீனவர்களுக்கான ஒய்வு அறையும், 200 ச.மீட்டரில் வானொலி தொடர்பு கோபுரமும், 321 ச.மீட்டரில் தங்கும் இடமும், 819 மீ சுற்று சுவரும், 116708 க.மீட்டரில் துhர்வாருதல் மற்றும் அகற்றுதல், 54093 க.மீட்டரில் நிலத்தை சமன்படுத்தும் பணிகளும், கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையும் மற்றும் மழைநீர் வடிகால் வசதிகளும் அமைக்கப்படுகிறது. மேலும் இத்திட்டத்திற்கு முறையான கடலோர மேலாண்மை ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.

இத்துறைமுகம் அமைவதின்மூலம் சுமார் 500 விசை படகுகள் 300 சிறிய வகை படகுகள் நிறுத்தும் வசதியும் மீன்களை பதப்படுத்துவதற்கும் வசதியும் ஏற்படுத்தப்படும். மேலும் சுகாதாரமான முறையில் கையாளுவதற்கு வசதிகள் இருப்பதால் மீன்களின் தரம் குறையாமல் பாதுகாக்கப்படும். எனவே மீன்களின் விலை மதிப்பு உயர்ந்து தங்களின் மீன்களை அதிக விலைக்கு விற்க இயலும். இதனால் அவர்களின் பொருளாதாரமும் மேம்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com