அண்ணாவின் 111-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அண்ணாசாலையில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் உள்பட அமைச்சர்கள் ஞாயிற்றுக்கிழமை மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தமிழ்ச் சான்றோர்கள், விடுதலைப் போராட்ட தியாகிகள் மற்றும் தலைவர்கள் ஆகியோரை பெருமைப்படுத்தும் வகையில், அவர்களது பிறந்த நாளன்று தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், அண்ணாவின் பிறந்த தினமான செப்டம்பர் 15 ஆம் தேதி, ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
அதன்படி, அண்ணாவின் 111-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள படத்துக்கு ஞாயிற்றுக்கிழமை (செப்.15) காலை 10 மணியளவில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், சட்டப்பேரவை, மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள், வாரியத்தலைவர்கள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.