கரோனா வைரஸ் நோய்த்தொற்று காரணமாக தமிழகத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 8ஆக உயர்ந்தது.
சைதாப்பேட்டையைச் சேர்ந்த 45 வயது நபர், கரோனா நோய்த்தொற்று அறிகுறிகளுடன் வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட சோதனைகளின் முடிவில் அவருக்கு கரோனா வைரஸ் (கோவிட்-19) நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இந்த நிலையில், அந்த நபர் கரோனா பாதிப்பு காரணமாக செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வேலூரில் பதிவான முதல் இறப்பு இதுவாகும். அரசின் விதிமுறைகளின் படி இறந்தவரின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர்த்து கரோனா வைரஸ் நோய்த்தொற்றால் பெண் ஒருவர் இன்று பலியாகியுள்ளார். இதன்மூலம், தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பலியானோரின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது.