

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டத்தில் போட்டிப் போட்டுக் கொண்டு, சமூக ஆர்வலர்கள் ஏழை , எளியவர்களுக்கு உதவிகள் செய்து வருகின்றனர்.
கரோனா தொற்று நோய் சீனாவில் தொடங்கி, அமெரிக்கா முதல் உலகம் முழுக்க மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.வல்லரசு நாடுகளையே அலறவும், அழவும் வைத்துள்ளது கரோனா.
அந்தக் "கொடூரமான "கரோனா தொற்று நோய் மேலும் பரவிவிடாமல் இருக்க, நாடெங்கும் ஊரடங்கும் போடப்பட்டுள்ளன. தமிழகத்தில் போடப்பட்டுள்ள 144 தடை உத்தரவால் பலரும், பலவிதமாகப் பாதிக்கப்பட்டாலும், ஏழை, எளிய, தினக்கூலி வேலைப் பார்ப்பவர்கள் உணவுக்கும், அத்தியாவசியப் பொருட்களுக்கும் சொல்ல முடியாத அளவிற்கு கஷ்டங்களை அடைந்து வருகிறார்கள்.ஏழை, எளிய வறுமையானவர்கள் அனைவருக்கும் சமூக ஆர்வலர்கள் தாமே முன் வந்து, போட்டிப் போட்டுக் கொண்டு உதவிகள் செய்து வருகிறார்கள்.
பெரியப்பள்ளி வாயில் சார்பில், கூத்தாநல்லூர் பகுதியில் பாதிக்கப்பட்ட அனைத்து ஜாதி, மதத்தினருக்கும் அத்தியாவசியப் பொருட்கள், பணம் உள்ளிட்டவைகளை வழங்கி வருகின்றனர். இதே போல், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூத்தாநல்லூர், பொதக்குடி கிளைகள் சார்பில், ரூ.3 லட்சத்திற்கும் மேலான உணவுப் பொருட்கள், அல்நூர் நிர்வாக இயக்குநர் ஆர்.எஸ்.அப்துல் ஹமீது சார்பில், கூத்தாநல்லூர், அத்திக்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் அனைத்து சமூகத்தினருக்கும் அத்தியாவசியப் பொருட்கள், நாட்டாண்மை எர்த் மூவர்ஸ் ஹாஜா பகுருதீன் சார்பில் முகக்கவசங்களும், வர்த்தக சங்கம் சார்பில் தலைவர் கு.ரவிச்சந்திரன், செயலாளர் ஜெ.சுவாமிநாதன், பொருளாளர் ராஜ ராஜன் ஆகியோர் ஏற்பாட்டின் படி நகரத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, முகக்கவசங்கள் வழங்கப்பட்டன.
மேலும், சமீர் நண்பர்கள் சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு நூற்றுக்கணக்கானவர்களுக்கு முகக் கவசங்களும் வழங்கப்பட்டன. கொத்தங்குடி ஊராட்சியில் கபசுரக் குடிநீர் காய்ச்சப்பட்டு, அப்பகுதி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.மேலும், கூத்தாநல்லூர் இந்து அமைப்பினர் சார்பில் தினமும் 500 பேருக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பொன்னாச்சி பொதுச் சேவை மையத்தின் சார்பில், உணவுப் பொட்டலங்களும், குழந்தைகளுக்குத் தேவையான பால் பவுடர்களும் வழங்கி வருகின்றனர்.
மனோலயம் மன வளர்ச்சிக் குன்றியோர் பயிற்சிப் பள்ளி நிறுவனர் ப.முருகையன் நிவாரணப் பொருட்களையும் வழங்கினார். இதேபோல், பொதக்குடி ஊர் உறவின் முறை ஜமாஅத் நிர்வாக சபை அறப்பணிச் சங்கத்தின் சார்பில், சிங்கப்பூர் நண்பர்கள், பொதக்குடி நண்பர்கள் சொற்பொழிவுக் குழுவினர், உதவும் உள்ளங்கள் கட்செவி அஞ்சல் குழுவினர் உணவுப் பொருட்களையும், முதியவர்கள் உள்ளிட்ட உடல் நலம் குன்றிய அனைவருக்கும் மருந்து, மாத்திரைகளும் வழங்கப்பட்டன. இதேபோல், வெளியில் தெரியாமல் பலரும் உதவி செய்து வருகிறார்கள். இச் சமூகப் பணி ஊரடங்கைத் தளர்த்தும் வரை தொடரும் எனத் தெரிவிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.