தமிழகத்துக்கு 24,000 விரைவு பரிசோதனைக் கருவிகள் வந்துள்ளன: முதல்வர் பேட்டி

சேலம் மாவட்டத்தில் கரோனா பாதித்த 24 பேரில் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக முதல்வர் பழனிசாமி  தகவல் தெரிவித்தார். 
தமிழகத்துக்கு 24,000 விரைவு பரிசோதனைக் கருவிகள் வந்துள்ளன: முதல்வர் பேட்டி
Updated on
1 min read

சேலம் மாவட்டத்தில் கரோனா பாதித்த 24 பேரில் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக முதல்வர் பழனிசாமி  தகவல் தெரிவித்தார். 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த மாவட்டமான சேலத்தில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதன்பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: 

சேலத்தில் 9 பகுதிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 24 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சேலத்தில் கரோனா தடுப்பு பணிகள் சிறப்பாக எடுக்கப்பட்டு வருகிறது. 

மாவட்ட நிர்வாகம் மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருகிறது. 98% குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் மற்றும் பொருள்கள் வழங்கப்பட்டு விட்டன. சேலத்தில் 78 மளிகைக் கடைகள் மூலமாக பொருள்கள் மக்களுக்கு வீட்டிற்குச் சென்று வழங்கப்படுகின்றன. அம்மா உணவகத்தில் தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 11,259 பேர் உணவருந்துகின்றனர். வேளாண் பொருட்களை விற்பனை செய்ய எந்த தடையும் இல்லை. ஊரடங்கை தளர்த்துவது குறித்து ஆராய நிதித்துறைச் செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 20 முதல் எந்தெந்த தொழிற்சாலைகளுக்கு அனுமதி என்பது குறித்து குழு ஆராய்ந்து முடிவு செய்யும். அதுகுறித்த அறிவிப்பு திங்கள்கிழமை வெளியாகும்.

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் குணமடைந்து வருகின்றனர். தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றுவது அரசின் கடமை. ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் இரவு, பகலாக பணியாற்றிக் கொண்டிருக்கிறது.

சீனாவிடம் ஆர்டர் செய்த 1.25 லட்சம் கருவிகளில் இன்று 24,000 விரைவு பரிசோதனைக் கருவிகள் தமிழகத்திற்கு வந்துள்ளன. மத்திய அரசு 12,000 பரிசோதனைக் கருவிகளை தருவதாகக் கூறியுள்ளது. ஆனால், தமிழக அரசு குறைந்தது 50,000 கருவிகள் வேண்டும் என்று கேட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும், இந்த நேரத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இன்றி கட்சிகள் மக்களுக்காக செயல்பட வேண்டும்' என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com