மதுரையில் கரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பல ஏழை எளிய அடித்தட்டு குடும்பங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். போதுமான உணவும் அத்தியாவசிய பொருள்களும் இன்றி வறுமையில் வாடி வருகின்றனர். இந்த நிலையில் ஆங்காங்கே பல தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் அவர்களுக்கு உதவி செய்து வருகின்றன.
இதே போல தன்னுடைய பேக்கரியின் மூலம் இலவசமாக ரொட்டி (பிரட்) வழங்கி உதவுகிறார் ஏஆர்எம் பேக்கரி உரிமையாளர் ராமசாமி. இவர் தன்னுடைய பேக்கரியின் முன்பாக அட்டைப் பெட்டி ஒன்றை வைத்து அதில் ரொட்டி பாக்கெட்டுகளைக் குவித்துவைத்துள்ளார். அதற்கு அருகிலேயே அட்டை ஒன்றில் பணம் இல்லாதவர்கள், உணவு கிடைக்காதவர்கள் இதிலுள்ள ரொட்டி பாக்கெட்டை எடுத்துக் கொள்ளலாம் என்றும் எழுதிவைத்துள்ளார். இதனால் உணவு கிடைக்காமல் அல்லாடும் பலர் நகரின் முன்பாக உள்ள அட்டைப் பெட்டியில் உள்ள ரொட்டி பாக்கெட்டுகளை எடுத்துச் செல்கின்றனர். தினசரி நூறு தினசரி நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு ரொட்டி பாக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
இதுகுறித்து ராமசாமி கூறுகையில்,
எங்களது பேக்கரியின் ஒரு ஓரமாக வைக்கப்பட்டுள்ள அட்டைப்பெட்டியில் பாக்கெட்டுகளை அடுக்கி வைத்துள்ளோம். அப்படி வெளிப்புறத்தில் இதிலிருந்து ஆளுக்கு ஒரு பிரட் பாக்கெட் இலவசமாக எடுத்துக் கொள்ளலாம் என்ற அறிவிப்பை ஒட்டி வைத்துள்ளோம்.
நாள்தோறும் ஏழை எளிய மக்கள் பிரட் பாக்கெட்டுகளை எடுத்து பயனடைகின்றனர். இந்த சேவையை மே 3ஆம் தேதி வரை தொடரவிருக்கிறோம். எங்களது பேக்கரியின் வாடிக்கையாளர் கள் சிலர் நாங்கள் செய்கின்ற சேவையைப் பார்த்து அவர்களும் தங்களால் இயன்ற உதவியை எங்களுக்கு வழங்கி வருகிறார்கள்.
மிகச் சுகாதாரமான சத்து மிகுந்த பிரெட் உணவு குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும் மிக ஏற்றதாகும். பேக்கரியில் நாங்கள் விற்பனைக்கு வைக்கின்ற அதே பொருளைத் தான் இலவசமாகவும் வைத்திருக்கிறோம். இதில் ஒரே ஒரு நிபந்தனை என்னவென்றால் ஒரு நபருக்கு ஒரு பிரட் என்பதுதான். இந்த சேவை பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது என்றார்.