எடப்பாடி: எடப்பாடி அருகே விவசாயத்தோட்டத்தில், 3 கிலோ எடைகொண்ட அதிசய காளான்கள் கிடைத்தது.
மழைக்காலங்களில், ஈரநிலங்களிலும், விவசாய தோட்டங்களிலும், அதிக எண்ணிக்கையில் குடைக்காளான்கள் வளர்வது இயற்கை, தனித்தன்மையாக ருசி கொண்ட இவ்வகை காளான்களை, விவசாயிகள் சமைத்து உண்பர். இவை பெரும்பாலும், 100 கிராம் முதல் 500 கிராம் வரை எடைகொண்டதாக இருக்கும்,
இந்நிலையில், எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட குப்பனூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி தங்கவேலுவின் தோட்டத்தில், 3 கிலோ எடைகொண்ட அதிசய காளான்கள் வளர்ந்துள்ளது. காவிரி ஆற்றங்கரை ஓரம் அமைந்துள்ள அவரது விவசாய நிலத்தில் தற்போது பருத்தி பயிரிட்டுள்ளது. வியாழக்கிழமை காலை விவசாயி தங்கவேல் தனது விவசயநிலத்திற்கு தண்ணீர் பாச்ச சென்றபோது. அங்கு தலா 3 கிலோ எடையுள்ள இரு காளான்கள் வளர்ந்திருப்பதை கண்டு ஆச்சரியப்பட்டார்.
இதுகுறித்து பூலாம்பட்டி உலவர் மன்ற அமைப்பாளர் எம்.ஆர்.நடேசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
காளான்களை பார்வையிட்ட நடேசன், அவை உண்ணக்கூடிய வகையினை சார்ந்த குடைக்காளான் எனவும், தற்போது காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், மலைக்காடுகளில் காணப்படும், இவ்வகை காளான்களின் வித்துகள் ஆற்றுநீரில் அடித்துவரப்பட்டிருக்கலாம் என தெரிவித்தார். அதிக எடைகொண்ட காளான்களை அப்பகுதி மக்கள் அதிசயத்துடன் பார்த்து சென்றனர்.