மாணவர்கள், முதியவர்கள் சுதந்திர தின விழாவில் பங்கேற்க வேண்டாம்: தமிழக அரசு

ஆகஸ்ட் 15-ம் தேதி சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெறும் சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் யாரும் பங்கேற்க வேண்டாம் என்று தமிழக அரசு கூறியுள்ளது.
மாணவர்கள், முதியவர்கள் சுதந்திர தின விழாவில் பங்கேற்க வேண்டாம்: தமிழக அரசு
மாணவர்கள், முதியவர்கள் சுதந்திர தின விழாவில் பங்கேற்க வேண்டாம்: தமிழக அரசு
Updated on
1 min read

ஆகஸ்ட் 15-ம் தேதி சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெறும் சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் யாரும் பங்கேற்க வேண்டாம் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில்,  
இந்தியத் திருநாட்டின் 74-வது சுதந்திரத் திருநாள்  கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தலைமைச் செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகஸ்ட் திங்கள் 15-ஆம் நாள் காலை 8.45 மணிக்கு தேசியக் கொடியினை ஏற்றி சிறப்பிப்பார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின நிகழ்ச்சியில் சுதந்திரப் போராட்ட தியாகிகளும், பொது மக்களும், மாணவர்களும், பள்ளிக் குழந்தைகளும் பங்கேற்பர். இந்த ஆண்டு கரோனா தொற்றால் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறது.

சுதந்திர போராட்ட தியாகிகளின் வயது மூப்பினை கருத்தில் கொண்டும், கரோனா தொற்றுப் பரவலை தவிர்க்கும் விதமாகவும், மாவட்டந்தோறும் பத்து சுதந்திர போராட்ட தியாகிகளின் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் மூலம் பொது சுகாதார வழிமுறைகளை பின்பற்றி பொன்னாடை போர்த்தி உரிய மரியாதை செலுத்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ஒவ்வொரு ஆண்டும், சுதந்திரத் தின விழாவின் ஒரு பகுதியாக மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தலைமை செயலக வளாகத்தில், இனிப்புப் பெட்டகம் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நிலவும் அசாதாரண சூழ்லையைக் கருத்தில் கொண்டு முதல்வரின் சார்பாக சமூக நலத் துறை அமைச்சர்  மாற்றுத் திறனாளி மாணவர்கள் தங்கியுள்ள விடுதிக்கு நேரில் சென்று, சமூக இடைவெளியை பின்பற்றி இனிப்பு பெட்டகத்தை மாணவர்களுக்கு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை கோட்டை கொத்தளத்தில், நடைபெறும் சுதந்திர தின நிகழ்ச்சியில், கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட முன்களப்பணியாளர்களை சிறப்பிக்கும் விதமாக, அவர்களுக்கு முதல்வர் அவர்கள் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பிக்க உள்ளார்.

சுதந்திர தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி மற்றும் வானொலியில் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கரோனா நோய் தொற்றை தவிர்க்கும் விதமாக இந்தாண்டு, பொது மக்கள், மாணவர்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் விழாவைக் காண நேரில் வரவேண்டாம் எனவும், சுதந்திர தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி / வானொலியில், கண்டு / கேட்டு மகிழுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com