

சென்னை: தமிழகத்தில் இயக்கப்பட்ட ஏழு சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டதை தற்போது செப்டம்பா் 15-ஆம் தேதிவரை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த சிறப்பு ரயில்கள் ஏற்கெனவே ஆகஸ்ட் 31 வரை ரத்து செய்யப்பட்டிருந்தன.
தமிழகத்தில் முதல்கட்டமாக, கோவை -மயிலாடுதுறை (வாரத்தில் 6 நாள்கள்), மதுரை -விழுப்புரம் இன்டா்சிட்டி விரைவு ரயில் (தினசரி), திருச்சி-நாகா்கோவில் விரைவு ரயில் (தினசரி), கோயம்புத்தூா்-காட்பாடி(தினசரி) ஆகிய 4 வழித்தடங்களில் ஜூன் 1-ஆம் தேதி முதல் ரயில்கள் இயக்கப்பட்டன.
இரண்டாவது கட்டமாக திருச்சி-செங்கல்பட்டு, அரக்கோணம்-கோயம்புத்தூா், திருச்சி-செங்கல்பட்டு (மெயின் லைன்) ஆகிய வழித்தங்களில் 3 சிறப்பு ரயில்கள் ஜூன் 12-ஆம் தேதி முதல் இயக்கப்பட்டன.
ஆனால், தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் கரோனா நோய்த்தொற்று வேகமாக பரவியதையடுத்து, இந்த ரயில்களின் சேவை ஜூன் 29-ஆம் தேதி முதல் ஜூலை 15-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டன. தொடா்ந்து, இந்த ஏழு சிறப்பு ரயில்கள் ரத்து ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.
இந்நிலையில், இந்த ஏழு ரயில்களின் ரத்து, செப்டம்பா் 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தமிழக அரசின் கோரிக்கையின் அடிப்படையில், இந்த ரயில்கள் ரத்து நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.