
திருவாரூர்: கன மழையால் நெற்பயிர் சேதமடைந்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படும், விவசாயிகள் யாரும் கவலைப்பட வேண்டாம் என தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறினார்.
திருவாரூர் மாவட்டத்திற்கு உள்பட்ட மேலப்புலியூர், கல்யாண மகாதேவி ஆகிய பகுதிகளில் மழை நீரால் சூழ்ந்துள்ள சம்பா, தாளடி பயிர்களை தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் இருசக்கர வாகனத்தில் சென்றும், முழங்கால் அளவு நீரில் நடந்து சென்றும் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த நான்கு தினங்களாக பெய்த மழையினால் திருவாரூர் மாவட்டத்தில் 54,627 ஹெக்டேர் பரப்பளவில் சம்பா, தாளடி பயிர்கள் நீரினால் மூழ்கி உள்ளன. இதில் பாதிப்படைந்துள்ள விவசாயிகள் ஒருவர் கூட தவறாமல் நிவாரணம் வழங்குவதற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். எனவே விவசாயிகள் யாரும் கவலைப்பட வேண்டாம்.
மாவட்டம் முழுவதும் தாழ்வான பகுதியில் உள்ள மக்களை தங்க வைப்பதற்காக 168 முகாம்கள் அமைக்கப்பட்டு 30 ஆயிரம் மக்கள் தங்கவைக்கப்பட்டு உணவு,குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது .
தற்போது வரை 72 கால்நடைகள் மழையினால் இறந்துள்ளது. 1111 வீடுகளின் சுவர் மழைநீரால் இடிந்து விழுந்துள்ளன. இவற்றையெல்லாம் கணக்கெடுக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. அனைவருக்கும் உரிய முறையில் நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.