மத்திய அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி பவானியில் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் சார்பில் சாலை மறியல் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அந்தியூர் மேட்டூர் பிரிவில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு திமுக நகர செயலாளர் ப.சீ.நாகராஜன் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் டி. ஏ.மாதேஸ்வரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலாளர் பி.கே.பழனிச்சாமி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்டச் செயலாளர் துரைராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பவானி ஜமுக்காளம், பெட்சீட் நெசவாளர் மற்றும் சாய தொழிலாளர் சங்க செயலாளர் வ.சித்தையன், சிபிஐ நகரச் செயலாளர் ப.மா.பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விவசாயிகளைப் பாதிக்கும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய விவசாயிகள் கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருந்த முழு அடைப்பு போராட்டத்தை முன்னிட்டு பவானி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.