திருப்பூர்: விவசாயிகள் அறிவித்துள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திருப்பூரில் பெரும்பாலான கடைகள் செவ்வாய்கிழமை அடைக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை முழு அடைப்பு போராட்டத்திற்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி தில்லியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு திருப்பூரில் பல்வேறு தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள், வணிகர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருந்தன. திருப்பூர் மாநகரில் பழைய பேருந்து நிலையம், ரயில் நிலையம், புஷ்பா ரவுண்டானா, அவிநாசி சாலை, புதிய பேருந்து நிலையம், போயம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெரும்பாலான கடைகள் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டுள்ளன.
அதேபோல் மாநகரில் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் குறைந்த அளவிலே இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் பெரும்பாலான பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தொழில் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.