ஜெயலலிதாவின் நினைவிடத்தை இடித்தால் ஆ. ராசாவின் கை வெட்டப்படும் என செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு புதன்கிழமை தெரிவித்தார்.
இதுபற்றி தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் கடம்பூர் ராஜு அளித்த பேட்டி:
"ஆ. ராசாவுக்கு ஜெயலலிதாவைப் பற்றி பேச அருகதை கிடையாது. காற்றிலே கூட ஊழல் செய்ய முடியும் என்பதை உலகிற்கு நிரூபித்துக் காட்டிய நவீன விஞ்ஞானி ராசா. 2ஜி மூலமாக அவரும் கனிமொழியும் ஜோடி சேர்ந்து ஜோடியாக திகார் சிறையில் இருந்தார்கள் என்பது வரலாற்று உண்மை.
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் அமைச்சராக இருந்தவர்கள் மீது காங்கிரஸ் அரசு வழக்குப் போட்டு அவர்கள் சிறைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது. இதைத்தான் திமுக தலைவராக இருந்த கருணாநிதி, கூடா நட்பு கேடாய் முடியும் என்று சொன்னார்.
இப்படிப்பட்ட இழி நிலையில் உள்ள ராசாவுக்கு ஜெயலலிதாவைப் பற்றி பேசுவதற்கு அருகதை இல்லை. நாவடக்கம் வேண்டும்.
அண்ணாவின் நினைவிடத்தில் கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று எழுதப்பட்டுள்ளது. அதைப்போல ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ஏதோ ஒரு எழுத்தை எழுதவோம். ஆட்சிக்கு வந்தால் இடிப்போம் என்கிறார். இடித்தால் அவருடைய கை வெட்டப்படும். துணிச்சலாக சொல்கிறோம். ஒன்றரை கோடி தொண்டர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.
ஜெயலலிதாவை இழிவாக பேசுகிற நேரத்தில் ஒரு ராசா அல்ல ஓராயிரம் ராஜாக்கள் வந்தாலும் அவர்கள் இருக்கின்ற இடம் தடம் தெரியாமல் அழிந்து போவார்கள்.
அது போல அப்படி ஒரு கருத்தை ஜெயலலிதாவின் நினைவிடத்தில் எழுத நேர்ந்தால் கருணாநிதியைப் பற்றி அவரது நினைவிடத்தில் நாங்கள் எழுதத் துவங்கினால் அந்த கல்லறையே போதாது. மெரினா கடற்கரையும் போதாது.
சர்க்காரியா கமிஷன் ஊழல் தொடங்கி மாணவர்கள் உரிமை போராட்டம் வரை திமுக ஆட்சியில் எப்படி எல்லாம் மக்கள் கஷ்டப்படுத்தப் பட்டார்கள் துன்பப்படுத்தப் பட்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். எங்களுக்கும் வரலாறு தெரியும். ஜெயலலிதாவை இழிவாகப் பேசினால் நாட்டில் நடமாட முடியாத நிலையை ஆ. ராசா விரைவில் சந்திப்பார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார் அவர்.