போக்குவரத்து வாகனங்களில் குறிப்பிட்ட 8 நிறுவனங்களின் ஜி.பி.எஸ். கருவிகளை மட்டுமே பொருத்த வேண்டும் என்ற உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தமிழக போக்குவரத்துத்துறை பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இந்த தடையை விதித்துள்ளது.
வாகனங்களுக்குத் தேவையான ஜி.பி.எஸ். உள்ளிட்ட கருவிகள் மற்றும் பாகங்களைத் தயாரிக்க 140க்கும் அதிகமான நிறுவனங்கள் உள்ள நிலையில், குறிப்பிட்ட 8 நிறுவனங்களில் தயாரிக்கப்பட்ட கருவிகளை மட்டுமே பொருத்த வேண்டும் என்று போக்குவரத்துத்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதனை எதிர்த்து ஸ்மார்ட் சிட்டி அஸோசியேஷன் அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதனை இன்று (புதன்கிழமை) விசாரித்த நீதிமன்றம், வாகனங்களுக்கான கருவிகளைத் தயாரிக்க 144 நிறுவனங்கள் உள்ள நிலையில், குறிப்பிட்ட 8 நிறுவனங்களின் பொருள்களை மட்டும் வாங்க வேண்டும் என்று கூறுவது ஏன்? என கேள்வி எழுப்பியது.
மேலும், இது தொடர்பாக போக்குவரத்துத் துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 18-ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.