வாழப்பாடியில் குண்டும் குழியுமான கடலுார் நெடுஞ்சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த கடலுார் சாலையை விரைந்து புதுப்பிக்க வேண்டுமென மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே பழுதடைந்த கடலுார் சாலை.
வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே பழுதடைந்த கடலுார் சாலை.
Published on
Updated on
2 min read

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடியில் போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த கடலுார் சாலை பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக சிதிலமடைந்து கிடக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள், பயணிகள் மற்றும் பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகி வகுகின்றனர். தேசிய நெடுஞ்சாலைத்துறை இச்சாலையை விரைந்து புதுப்பிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சி 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு முக்கிய மையமாக விளங்கி வருகிறது. கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளுக்காக சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தினந்தோறும் வாழப்பாடிக்கு வந்து செல்கின்றனர்.

வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே பழுதடைந்த கடலுார் சாலை.

அரசு மற்றும் தனியார் பேருந்துகள் உள்ளிட்ட பொது போக்குவரத்து வாகனங்கள், லாரி, டெம்போ போன்ற சரக்கு வாகனங்கள் மற்றும் வேன், கார்கள் உட்பட வாழப்பாடிக்கு தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன.

வாழப்பாடியில், பேருந்து நிலையம், பெரும்பாலான அரசு அலுவலகங்கள், வங்கிகள், பள்ளிகள், வணிக வளாகங்கள், கடைவீதி, தினசரி சந்தை, பயணியர் மாளிகை, தபால்நிலையம், வேளாண் விற்பனை நிலையம், காவல்நிலையம், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் ஆகியவை, கடலுார் நெடுஞ்சாலையிலேயே அமைந்துள்ளன.

வாழப்பாடி மகளிர் காவல் நிலையம் அருகே குண்டும் குழியுமாக காணப்படும் கடலுார் சாலை.

இதனால், சேலம்-சென்னன இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் போது, வாழப்பாடியில் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்து வந்த கடலுார் சாலையை விரிவுபடுத்தாமல், முத்தம்பட்டியில் இருந்து மத்துார் வரையிலான 4 கி.மீ., துாரத்திற்கு இருவழி புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த கடலுார் சாலை இன்றளவிலும் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகிறது.

ஆனால், இச்சாலையை தேசிய நெடுஞ்சாலைத்துறை முறையாக பராமரிக்காமல் கிடப்பில் போட்டுள்ளது. இதனால், முத்தம்பட்டி பிரிவுரோடு, பேருந்துநிலையம், காவல்நிலையம், அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குண்டும் குழியுமாக சிதிலமடைந்து கிடக்கிறது.

மழை பெய்யும் போது சேறும் சகதியுமாக மாறி கிடக்கும் இச்சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள், பயணிகள் மற்றும் பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சாலையிலுள்ள குழிகளில் சிக்கி இரு சக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.

எனவே, வாழப்பாடியில் குண்டும் குழியுமாக படுமோசமாக சிதிலமடைந்து கிடக்கும் கடலுார் சாலையை புதுப்பிக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாழப்பாடி பகுதி பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

குழிகளை சீரமைக்கும் தன்னார்வலர்கள்:
கடந்த ஒரு மாதமாக பரவலாக பெய்து வரும் மழையில் சாலை மேலும் சிதைந்து விட்டது. இதனால், ஆட்டோ ஓட்டுநர்கள், தன்னார்வர்கள் மண்கொட்டி நிரவி தற்காலிகமாக சாலையை சீரமைத்து பயன்படுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் சாலையை புதுப்பிக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்கவில்லையென பொதுமக்களிடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com