
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வீட்டில் இருந்தபோது காங்கிரஸ் பிரமுகரிடம் வெடிகுண்டு, ஆயுதங்களைக் காட்டி மிரட்டல் விடுத்து பணம் கேட்ட இளைஞரை வியாழக்கிழமை காவல்துறையினர் கைது செய்தனர்.
காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சியின் முன்னாள் தலைவர் எஸ். மாங்குடி. இவர் காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை மாவட்டத் துணைத் தலைவராகவும், காரைக்குடி சட்டபேரவைத் தொகுதி பொறுப்பாளராகவும் பதவி வகித்து வருகிறார்.
வியாழக்கிழமை காலை 8 மணியளவில் மாங்குடி வீட்டில் இருந்த போது தமிழ் தேசம் மக்கள் கட்சியைச் சேர்ந்த தமிழ்குமரன் (38) ஒரு பத்திரிகைக்காக சந்தா தொகை வாங்க வந்ததாக தெரிவித்துள்ளார். பின்னர் குறிப்பிட்ட தொகையைக் கூறி அதனைத் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு மாங்குடி மறுப்புத் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தமிழ் குமரன் பட்டாக்கத்தி மற்றும் நாட்டு பைப் வெடிகுண்டுகளை மாங்குடியின் மேஜை மீது வைத்து மேலும் பணம் கேட்டு மிரட்டி உள்ளார்.
இந்த தகவலை மாங்குடி காவல் துறையினருக்கு தெரிவித்துள்ளார். இதையடுத்து காரைக்குடி டி.எஸ்.பி அருண், வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுந்தரமகாலிங்கம் மற்றும் காவலர்கள் விரைந்து சென்று மிரட்டல் விடுத்த தமிழ்குமரனை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு நாட்டு வெடிகுண்டை பாதுகாப்பாக அப்புறப்படுத்தி வைத்துள்ளனர்.
மத்திய அமைச்சராக ப. சிதம்பரம் இருந்த போது அவரது இல்லத்தில் வெடிகுண்டு வீசப்படும் என்று துண்டுப்பிரசுரத்தை வீசிச் சென்ற வழக்கில் தமிழ்குமரன் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகங்கை ஏடிஎஸ்பி ராஜேந்திரன், ஏ.எஸ்.பி ( பயிற்சி) சந்திஷ், மாவட்ட டிஎஸ்பி வரதராஜன் மற்றும் காவலர்கள் வடக்கு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியினர் காவல் நிலையம் முன்பாக திரண்டு நின்றிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.