வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பேளூரில், வேரெந்த பகுதியிலும் இல்லாத வகையில், மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் எழும் சிறுவர்-சிறுமியர், இறைவனைப் புகழ்ந்து திருப்பாவை, திருவெம்பாவை பாடிச்சென்று, சைவ-வைணவ மத நல்லிணக்க ஊர்வலமும், வழிபாடும் நடத்தி வருகின்றனர். நிகழாண்டும் நடுங்கும் குளிரையும் பொருட்படுத்தாது ஊர்வலத்தை தொடங்கிய சிறுவர்-சிறுமியரை, இறைவனின் துாதுவர்களாக கருதி வரவேற்று பொதுமக்களும், பக்தர்களும் வழிபட்டனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பேளூர், புராண காலத்திலேயே வேள்வியூர் என்ற பெயரில் மிகச்சிறந்த ஆன்மீக தலமாக விளங்கியுள்ளதை. கல்வெட்டுகளும், புராணங்களும் உறுதிபடுத்துகின்றன.
ராமன் தாகம் தீர்க்க வசிஷ்டர் அருளியதாக கருதப்படும் வசிஷ்ட நதிக்கரையில் அமைந்துள்ள பேளூரில், பஞ்சபூத சிவன் சைவ திருத்தலங்களில் முதல் தலமான தான்தோன்றீஸ்வரர் கோவிலும், மறுகரையில், அஷ்டபுஜ பால மதன வேணுகோபால சுவாமியெனும், பழமையான வைணவ பெருமாள் கோவிலும் அமைந்துள்ளது.
இறைவழிபாட்டிற்கு உகந்த மாதமான மார்கழியில், பேளூரில் அதிகாலையில் எழும் சிறுவர்–சிறுமியர், பெருமாள் கோவிலில் கூடி திருப்பாவை, திருவெம்பாவை பாடி, பாரம்பரிய முறைப்படி சங்கு ஊதி வழிபாடு நடத்துவதும், பின்னர் அங்கிருந்து சிவனை போற்றியபடி முக்கிய வீதிகளில் வழியாக, தான்தோன்றீஸ்வரர் கோவிலுக்கு ஊர்வலமாகச் சென்று வழிபாடு நடத்துவதும், மரபு மாறாமல் தொடர்ந்து வருகிறது.
தமிழகத்தின் வேரெந்த பகுதியிலும் இல்லாத வகையில், சைவ-வைணவ மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் நடைபெறும் இந்த ஊர்வலத்திற்கு, பொதுமக்களும், பக்தர்களும் வழிநெடுக கோலங்களை வரைந்து வைத்து, இறைவனின் துாதுவர்களாக கருதி சிறுவர்-சிறுமியரை வரவேற்று வழிபடுவது குறிப்பிடத்தக்கதாகும்.
நடுங்கும் குளிரிலும், இந்தாண்டும் மார்கழி முதல் நாளான புதன்கிழமை அதிகாலையில் விழித்தெழுந்த சிறுவர்-சிறுமியர் மார்கழி வழிபாட்டு ஊர்வலத்தை நடத்தினர். இச்சிறுவர் சிறுமியருக்கு. சைவ-வைணவ வழிபாட்டுக்குழுவினர் மற்றும் ஆன்மீக அன்பர்களும், பொதுமக்களும், பக்தர்களும் பாராட்டுத் தெரிவித்தனர்.