சேலம்: தமிழகத்தில் கரோனோ பாதிப்பு படிப்படியாக குறைந்துள்ளது, இறப்பு சதவீதமும் 1 சதவிகிதத்திற்கு கீழ் குறைந்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சேலத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் கரோனோ பாதிப்பு படிப்படியாக குறைந்துள்ளது. 75 ஆயிரம் பேருக்கு தொற்று பரிசோதனை செய்யப்பட்டவர்களில் ஆயிரத்து நூறு பேருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தொற்று பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்பு சதவீதமும் 1 சதவிகிதத்திற்கு கீழ் குறைந்துள்ளது. நோய்த்தொற்றும் 2 சதவீதமாக குறைந்துள்ளது. அதையும் ஜீரோவாக மாற்ற வேண்டும்.
மேலும் கல்லூரி விடுதிகள் மற்றும் உணவு விடுதிகளில் 20 பேருக்கு மேல் தங்கக்கூடாது. கட்டாயம் அனைவரும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும்.
சென்னை ஐஐடியில் நோய்தோற்று கண்டறியப்பட்டுள்ளதால் அனைத்து கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் 15 நாள்களுக்கு ஒரு முறை பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் கல்லூரி ஆய்வகங்கள் மற்றும் உணவு விடுதிகளில் மாணவர்கள் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், ஒன்றாக அமர்ந்து உணவு அருந்தக்கூடாது. பெரும்பாலும் ஆன்லைன் வகுப்புகளை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
கரோனோவில் இருந்து மீண்டு வந்தவர்களுக்கு மனநல சிகிச்சை அந்தந்த அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்டு வருகிறது.
தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக மக்கள் புகார் தெரிவித்தால் அங்கு உடனடியாக ஆய்வு நடத்தி அந்த மருத்துவமனையின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.