நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரம் மீள்வதற்கு கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
விழுப்புரத்தில் தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் நலச்சங்கம் 12வது மாவட்ட மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் அருகே கானையில் நடைபெற்ற இம்மாநாட்டில் 37 மாவட்டங்களைச் சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்கள் குழுவினர் பாட்டுப் பாடியும், நடனமாடியும், தனித்தனி குழுக்களாக ஊர்வலமாக வந்தனர்.
கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், தெருக்கூத்து, நாடக கலைக்குழு, பறை இசை, பம்பை உடுக்கை, மேளம் தாளங்களுடன் ஏராளமான கலைக்குழுவினர் பேரணியில் பங்கேற்றனர்.
இதனையடுத்து தனியார் மண்டபத்தில் 12 மாவட்ட மாநாடு நடைபெற்றது. சங்கத்தின் மாநில தலைவர் எம். சத்யராஜ் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார்.
மாநில தலைமை ஆலோசகர் நீ.பழனி, பொதுச் செயலாளர் தங்க. ஜெயராஜ் மாவட்டத் தலைவர் செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.
மாநிலத் தலைவர் சத்யராஜ் கூறியதாவது: சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு நாளன்று மாவட்ட மாநாடுகளை நடத்தி வருகிறோம்.
இன்றைய மாநாட்டில் 37 மாவட்டங்களிலிருந்து 5 ஆயிரம் கலைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கரோனா காலத்தில் நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரம் ஓராண்டாக பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளை மட்டும் தடை தொடர்ந்துள்ளது. இதனை நீக்க வேண்டும்.
கலைஞர்கள் வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும். 58 வயதை கடந்த நாட்டுப்புற கலைஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
கலை பண்பாட்டுத்துறை உரிய கலைஞர்களுக்கு அடையாள அட்டை வழங்காமல் புறக்கணிக்கிறது.
கலைமாமணி விருதுகளையும் நியாயமான கலைஞர்களுக்கு வழங்கி இருக்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுருக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆதரவாக நாட்டுப்புற கலைஞர்கள் செயல்படுவோம்.
இல்லாவிட்டால் 234 தொகுதிகளிலும் நாட்டுப்புறக் கலைஞர்கள் சார்பில் தனித்து போட்டியிடவும் தயாராக உள்ளோம் என்றார்.