
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் உள்ளே உள்ள தில்லை திருச்சித்திரக்கூடம் கோவிந்தராஜப் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருநாளினை முன்னிட்டு பரமபத வாசல் (சொர்க்க வாசல்) திறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று பெருமாளை தரிசித்தனர்.
வைகுண்ட ஏகாதசி: இந்துக்கள், மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை 11-ஆம் நாளினை வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடுகின்றனர். திருமாலின் இருப்பிடமாகக் கருதும் வைகுண்டத்தின் கதவுகள் அன்று திறக்கப்படுவதாகவும் நம்புகின்றனர். இந்நாளில் முன்னிரவில் உறங்காது இருந்து அதிகாலையில் பெருமாள் கோவில்களில் அன்று மட்டும் திறக்கும் வடக்குத் திசையில் உள்ள பரமபத வாயில் என்றழைக்கப்படும் வாயில் வழியே சென்று இறைவனை வழிபடுவர். இந்நாளில் வழிபடுவோருக்கு பரந்தாமனின் பூரண அருள் கிடைக்கும் என்றும், நீங்காப் புகழுடன் அனைத்து ஐஸ்வர்யங்களையும் பெற்று வாழலாம் என்பதும் ஐதீகம்.
108 வைணவத் திருத்தலங்களில் 23-வது திருத்தலமாக தில்லை திருச்சித்திரக்கூடம் கோவிந்தராஜப் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோயிலில் குலசேகர ஆழ்வாரும், திருமங்கை ஆழ்வாரும் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலை தில்லை கோவிந்தராஜப்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆண்டாள் அருளித்த திருப்பாவை பாசுரங்கள் பாடப்பட்டன. பின்னர் உற்வச மூர்த்தி பார்த்தசாரதி பெருமாள் பரமபாத வாசலில் முத்தங்கி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதியம் பூதேவி, தேவி, ஆண்டாள் சமேத தில்லைகோவிந்தராஜப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.