காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் வெள்ளிக்கிழமை வைகுண்ட ஏகாதசி நாளன்று பெருமாளை சேவிக்க விடாமல் கோவில் நாள் முழுவதுமாக மூடப்பட்டிருந்தமைக்கு பக்தர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட வைணவத்திருக்கோவில்கள் 14க்கும் மேற்பட்டவை காஞ்சிபுரத்தில் உள்ளன. இவற்றில் அஷ்டபுஜப்பெருமாள் கோவில்,வைகுண்டப் பெருமாள்கோவில் ஆகியனவற்றில் பெருமாள் சிறப்பாக அலங்காரமாகி சொர்க்க வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக வருவதை ஏராளமான பக்தர்கள் தரிசிப்பது வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் இந்த ஆண்டு இரு கோவில்களிலும் அதிகாலை 2 மணி நேரம் மட்டுமே கோவிலை திறந்து விழாவை நடத்தி விட்டு மூலவரைக் கூட தரிசிக்க விடாமல் கோவில் முழு நேரமும் நுழைவுவாயில் கதவு மூடப்பட்டிருந்தது. இதற்கு பக்தர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பூ வியாபாரியும்,பெருமாள் பக்தருமான தெய்வேந்திரன் என்பவர் கூறுகையில், ஸ்ரீரங்கத்தில் பெருமாளை சேவிக்க பலரும் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.ஆனால் காஞ்சிபுரத்தில் பெருமாளை தரிசிக்க முடியாமல் கோவில் முழுவதுமாக மூடப்பட்டு பக்தர்கள் யாரும் வந்து விடாதபடி தடுப்புகளும் அமைக்கப்பட்டு காவலர்கள் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது வருத்தமளிக்கிறது. அதிகாலை சொர்க்கவாசல் திறப்பின் போது ஒரு சில முக்கியப் பிரமுகர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஏழைகள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.
திருப்பதியில் கூட ஆன்லைன் மூலம் தரிசன டிக்கட்டுகள் விற்பனை செய்யப்பட்டு சுவாமி தரிசனம் நடந்துள்ளது. சமூக இடைவெளியைப் பின்பற்றும் வகையில் ஒவ்வொருவராக சுவாமி தரிசனம் செய்ய அனுமதித்திருக்கலாம் எனவும், அறநிலையத்துறை அதிகாரிகள் பாரபட்சத்துடன் செயல்பட்டிருப்பதாகவும் கவலை தெரிவித்தார்.
வைகுண்ட ஏகாதசி நாளன்று ராஜகோபுர நுழைவு வாயில் முழுவதுமாக மூடப்பட்டிருந்த அஷ்டபுஜப் பெருமாள் திருக்கோவில்.