நாகப்பட்டினம்: நாகை அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்விக்கப்பட்ட 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது நாகை அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள். இக்கோயிலில், ஆண்டு தோறும் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
இதன்படி, இக்கோவிலில் கடந்த 15-ஆம் தேதி முதல் ஏகாதசிப் பெருவிழா நடைபெற்று வருகிறது. ஏகாதசி விழாவின் பகல் பத்து உத்ஸவத்தின் முக்கிய நிகழ்வாக பெருமாள் மோகினி அலங்காரத்தில் சேவை சாதிக்கும் உத்ஸவம் வியாழக்கிழமை நடைபெற்றது.
வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள், ஶ்ரீதேவி, பூதேவி சமேதராக வெள்ளிக்கிழமை காலை சுமார் 5 மணி அளவில் பரமபத வாசல் வழியே எழுந்தருளினார். பக்தி முழக்கங்களை எழுப்பி பக்தர்கள் வழிபட்டனர்.