ஓமலூர் அருகே பிறந்து சில மணிநேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தை குடியிருப்பு பகுதியில் வைத்து உரிய நேரத்தில் பொதுமக்கள் கவனித்தால் பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள எம்.செட்டிபட்டியில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தை குடியிருப்பு பகுதியில் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்.செட்டிபட்டி பகுதியில் துரைசாமி-பவுனா என்பவருக்கு சொந்தமான வீட்டின் அருகே ஞாயிற்றுக்கிழமை காலை பச்சிளம் குழந்தை ஒன்று துணிகள் சுற்றப்பட்ட நிலையில் வீட்டின் அருகே இருந்துள்ளது. அப்பொழுது நாய் குரைக்கும் சத்தம் மற்றும் குழந்தையின் அழுகுரல் கேட்டு பவுனா வந்து அந்த குழந்தையை பார்த்துள்ளார். அதில் பிறந்து சில மணித்துளிகள் ஆன ஆண் பச்சிளங் குழந்தை கிடந்துள்ளது. இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த மக்களிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அந்த குழந்தை மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து தொளசம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முட்புதரில் வீசி செல்லாமல் குடியிருப்பு பகுதியில் வீசப்பட்டதால் பச்சிளம் ஆண் குழந்தை பொதுமக்களால் உரிய நேரத்தில் காப்பாற்றப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.