

வாழப்பாடி: இணைய வழியில் பன்னாட்டு அளவில் நடைபெற்ற சிறார் கதை சொல்லும் போட்டியில், வாழப்பாடியை சேர்ந்த ஆசிரியர் தம்பதியின் மகளான, 9 வயது சிறுமி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்தவர் சிவ.எம்கோ. இவர் பேளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜெ.புஷ்பா, வாழப்பாடி அண்ணா நகர் காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
இத்தம்பதியரின் இளைய மகள், லோகானந்த ஸ்ரீ (வயது 9). தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கரோனா தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய முன்னாள் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஐ.ஏ.எஸ். அதிகாரி பீலா ராஜேஷ் போல உடையணிந்து, அவரைப்போல பேட்டி அளித்து அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றார்.
தற்போது, ஐக்கிய அரபு நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் நடத்திவரும் இலக்கிய அமைப்பான 'கானல்', இணைய வழியில் நடத்திய, சிறார்கள் கதை சொல்லும் போட்டியில் பங்கேற்ற லோகானந்தஸ்ரீ, பன்னாட்டு அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். மிக நேர்த்தியாக கதை சொல்லும் இவரது காணொலி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இச்சிறுமிக்கு, வாழப்பாடி இலக்கிய பேரவை, நெஸ்ட் அறக்கட்டளை, வாழப்பாடி அரிமா சங்கம், இந்திய கலாசார நட்புறவுக் கழகம், உலக தமிழ் கழக கிளை ஆகிய தமிழ் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.