
நாமக்கல்: மலைவாழ் மக்களின் நலனுக்காக அதிமுக அரசு பாடுபடும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதியில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று காலை 9 மணி அளவில் தேர்தல் பரப்புரையை தொடங்கினார்.
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி செவ்வாய், புதன்கிழமைகளில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை செய்து வருகிறார். அந்த வகையில் புதன்கிழமை சேந்தமங்கலம் வந்த அவர் மலைவாழ் மக்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்தினார்.
அப்போது பழங்குடியின மக்கள் கொல்லிமலைக்கு அவசர ஊர்தி, பெண்களுக்கு கால்சியம் குறைபாடு அதிகம் உள்ளதால் ரத்த வங்கி, வேளாண் பயிர்களை மயில்கள் நாசம் செய்வதால் அப்பறவைகளுக்கென தனி பூங்காவை ஏற்படுத்தி மக்களை பாதுகாக்க வேண்டும். இங்கு வாசனை திரவியங்கள் அதிகம் விளைவதால் சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும். இணைய வசதி ஏற்படுத்திக் கொடுக்க என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முதல்வரிடம் வலியுறுத்தி தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர், கொல்லிமலை வனப் பகுதியில் சாலைகள் அமைப்பதற்கு மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும். மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்தால் நாங்களே சாலை அமைத்துக் கொடுத்து விடுவோம். கொல்லிமலையில் நீர்மின் திட்டம் ரூ.400 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே இங்கு அரசு கலைக்கல்லூரி உருவாக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஏற்காடு மலைவாழ் தொகுதியை போல் சேந்தமங்கலம் தொகுதியும் மேம்படுத்தப்படும். மலைப்பகுதிகளில் சோலார் மின் வசதி, இணையதள சேவையை வசதிக்கான உயர் கோபுரங்கள் அமைக்க உரிய ஆய்வு செய்யப்படும். மலைவாழ் மக்களின் முன்னேற்றத்துக்காக இந்த அரசு முழுமையாக பாடுபடும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.