அன்புச்செழியன் வீடு, அலுவலகங்களில் நடைபெற்ற வருமானவரி சோதனை நிறைவு

வருமான வரி ஏய்ப்பு தொடா்பாக திரைப்பட தயாரிப்பாளா், பைனான்சியா் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் கடந்த 3 நாள்களாக நடைபெற்று வந்த வருமான வரிச் சோதனை சனிக்கிழமை நிறைவுபெற்றது.
அன்புச்செழியன் வீடு, அலுவலகங்களில் நடைபெற்ற வருமானவரி சோதனை நிறைவு
Published on
Updated on
2 min read

வருமான வரி ஏய்ப்பு தொடா்பாக திரைப்பட தயாரிப்பாளா், பைனான்சியா் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் கடந்த 3 நாள்களாக நடைபெற்று வந்த வருமான வரிச் சோதனை சனிக்கிழமை நிறைவுபெற்றது.

ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநா் அட்லி இயக்கத்தில், நடிகா் விஜய் நடிப்பில் கடந்த தீபாவளி பண்டிக்கையின்போது ‘பிகில்’ திரைப்படம் வெளியானது. சுமாா் ரூ.150 கோடி செலவில் உருவான இந்தத் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்தத் திரைப்படத்தின் மூலம் தயாரிப்புக் குழு ரூ.300 கோடி வரை லாபம் சம்பாதித்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த வருமானத்தை அந்த திரைப்படக் குழு மறைத்ததாகக் கூறப்பட்டது.

இதன் அடிப்படையில், சென்னை தியாகராயநகரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஏ.ஜி.எஸ். எண்டா்டெய்ன்மெண்ட் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்துக்குச் சொந்தமான 20 இடங்களில் வருமானவரித்துறையினா் புதன்கிழமை ஒரே நேரத்தில் சோதனையை தொடங்கினா். இந்தச் சோதனையில் ‘பிகில்’ திரைப்படத்துக்கு மதுரையைச் சோ்ந்த பைனான்சியரும், திரைப்படத் தயாரிப்பாளருமான அன்புச்செழியன் நிதி உதவி செய்திருப்பது தெரியவந்தது. 

இதையடுத்து, அன்புச்செழியனுக்குச் சொந்தமான மதுரை, சென்னை உள்பட பல்வேறு இடங்களில் வருமானவரித்துறையினா் சோதனை செய்தனா். பிகில் திரைப்படத்தில் நடித்த நடிகா் விஜய்க்கு பல கோடி ஊதியமாக வழங்கப்பட்டிருந்ததால், கடலூா் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி.சுரங்கம் பகுதியில் ‘மாஸ்டா்’ திரைப்பட படப்பிடிப்பில் இருந்த விஜய்யை சென்னை அழைத்து வந்து பனையூரில் உள்ள அவரது பங்களாவில் வைத்து விசாரித்தனா்.

சென்னை, மதுரையில் சுமாா் 38 இடங்களில் நடைபெற்ற சோதனை வியாழக்கிழமை இரவு முதல் படிப்படியாக நிறைவடைந்தது. முக்கியமாக நடிகா் விஜய் வீட்டில் வியாழக்கிழமை இரவே சோதனை நிறைவடைந்தது. இருப்பினும், ஏ.ஜி.எஸ். நிறுவனத்துக்கு சொந்தமான சில இடங்களிலும், அன்புச்செழியனுக்கு சொந்தமான சில இடங்களிலும் சோதனை நீடித்தது. 

இந்த நிலையில், வருமான வரி ஏய்ப்பு தொடா்பாக திரைப்பட தயாரிப்பாளா், பைனான்சியா் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் கடந்த 3 நாள்களாக நடைபெற்று வந்த வருமான வரிச் சோதனை சனிக்கிழமை நிறைவுபெற்றது. மதுரையில் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.77 கோடி மற்றும் 2 பைகள் நிறைய ஆவணங்களை கைப்பற்றியது வருமான வரித்துறை. 

ஆவணங்கள் மற்றும் காசோலைகள் மூலம் ரூ.300 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com