மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு 1500 பேருக்கு பிரியாணி வழங்கப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த திமிரி பேரூராட்சியில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாள் விழா தேரடி திரௌபதியம்மன் கலையரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.
பேரூராட்சி செயலாளர் எம்.டி.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற விழாவில், ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து பகல் 1 மணிக்கு பொதுமக்கள் 1500பேருக்கு பிரியாணி வழங்கப்பட்டது. பொதுமக்கள் அங்கு போடப்பட்ட மேசை நாற்காலியில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்டுச் சென்றனர். இதில் கட்சியின் அவைத் தலைவர் நாராயணமூர்த்தி, இணைச் செயலாளர் கந்தசாமி, மாவட்ட பிரதிநிதி பாஸ்கர் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அதே போல் திமிரி மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் தாமரைப்பாக்கம் கிராமத்தில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா உருவப்படத்திற்கு ஒன்றிய செயலாளர் நவகிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் ஒன்றியப் பொருளாளர் ராமன், ஒன்றிய பாசறைச் செயலாளர் ரமேஷ், முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவர் அர்ஜூனன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதேபோன்று விளாபாக்கம் பேரூராட்சி அதிமுக சார்பில் பேருந்து நிலையத்தில் நகர செயலாளர் ராமசேகர் தலைமையில் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.