முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, ஓமலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கருப்பூர் நகரச் செயலாளர் கோவிந்தசாமி தலைமையில் கருப்பூரில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில், ஓமலூர் எம்.எல்.ஏ எஸ்.வெற்றிவேல் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதேபோன்று, அம்மன்கோவில், குண்டுகல்லூர், தட்டாஞ்சாவடி பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளிலும் எம்.எல்.ஏ எஸ்.வெற்றிவேல் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ஓமலூர் நகரச் செயலாளர் என்.சரவணன் தலைமையில் ஓமலூர் பேருந்து நிலையம் முன்பு ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு, எம்.எல்.ஏ எஸ்.வெற்றிவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, அவருடைய வயதைக் குறிக்கும் வகையில் 72 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட கேக் வைக்கப்பட்டிருந்தது. பிரம்மாண்ட கேக்கினை, எம்.எல்.ஏ. எஸ்.வெற்றிவேல் வெட்டி பொதுமக்கள் மற்றும் தொண்டர்களுக்கு வழங்கினார்.
இதனையடுத்து, ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியினையும் எம்.எல்.ஏ எஸ்.வெற்றிவேல் தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ பல்பாக்கி சி.கிருஷ்ணன், ஓமலூர் ஒன்றியக்குழுத் தலைவர் எஸ்.எஸ்.கே.ஆர்.ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் அசோகன், கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.