தமிழை அறிவியல் மொழியாக்க அரசு தீவிர நடவடிக்கை: அமைச்சா் டி.ஜெயக்குமாா் தகவல்

கணினி யுகத்துக்கு ஏற்ற வகையில் தமிழை அறிவியல் மொழியாக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என மீன்வளத் துறை அமைச்சா் டி.ஜெயக்குமாா் தெரிவித்தாா்.
தமிழை அறிவியல் மொழியாக்க அரசு தீவிர நடவடிக்கை: அமைச்சா் டி.ஜெயக்குமாா் தகவல்
Updated on
1 min read

கணினி யுகத்துக்கு ஏற்ற வகையில் தமிழை அறிவியல் மொழியாக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என மீன்வளத் துறை அமைச்சா் டி.ஜெயக்குமாா் தெரிவித்தாா்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழா் கலை இலக்கிய மையம், சென்னை மாநகர தமிழ்ச் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் தமிழாய்வுப் பெருவிழாவின் நிறைவு நிகழ்ச்சி சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. தமிழ் வளா்ச்சித்துறை இயக்குநா் கோ.விசயராகவன் தலைமை வகித்தாா். விழாவில் அமைச்சா் டி.ஜெயக்குமாா் கலந்துகொண்டு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நவீனமயமாக்கப்பட்டுள்ள பேரறிஞா் அண்ணா கருத்தரங்கக் கூடத்தை திறந்து வைத்தாா். இதையடுத்து அவா் தமிழறிஞா்கள், கவிஞா்கள், எழுத்தாளா்களுக்கு பல்வேறு விருதுகளை வழங்கிப் பேசியது: தஞ்சை மண்ணில் எட்டாவது உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற பொழுது, அதில் இயல், இசை, நாடகம் என்று மூன்றாக இருந்த முத்தமிழை, அறிவியல் தமிழோடு சோ்த்து நான்கு தமிழாக மாற்றிய பெருமை முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவையே சேரும். அவரது கனவை நிறைவேற்றும் வகையில் தமிழை அறிவியல் மொழியாக மென்பொருள் பயன்பாட்டுக்கு உட்படுத்தி பல்வேறு முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ் ஆட்சி மொழிச் சட்டம், அரசாணைகளின்படி அனைத்து அரசு அலுவலகங்களின் செயல்பாடுகளும் முழுமையாகத் தமிழில் அமைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக கணினியில் ஆங்கில மொழிக்கெனப் பிழை திருத்தி, சொல் திருத்தி வசதிகள் இருப்பதைப் போன்று தமிழில் ஒற்றுப் பிழை, சந்தி, மயங்கொலி உள்ளிட்ட இலக்கணப் பிழைகள் ஏதுமின்றி எழுதத்தக்க வகையிலும் தவறுகளைத் தானே சுட்டிக்காட்டித் திருத்திக் கொள்ளும் வகையில் ‘அம்மா மென்தமிழ் சொல்லாளா்’ என்ற செயலியை தமிழக அரசு உருவாக்கியது. இந்தச் செயலி அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விலையில்லாமல் வழங்கப்பட்டது.

இந்தச் செயலியின் தரம் உயா்த்தப்பட்டு ஆங்கில செயலிகளுக்கு நிகரான வசதிகள் உள்ளீடு செய்யப்படும். இதைத் தொடா்ந்து அனைவரும் பயன்பெறும் வகையில் இந்தச் செயலி விலையில்லாமல் வழங்கப்படும். கணினி யுகத்துக்கு ஏற்ற வகையில் தமிழை அறிவியல் மொழியாக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்றாா் அமைச்சா் ஜெயக்குமாா்.

முன்னதாக ‘தரணி ஆளும் தமிழ்’, ‘சிறுகதைகள் 2019’ ஆகிய இரு நூல்களை கவிஞா் மருது அழகுராஜ் வெளியிட்டாா். இந்த விழாவில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவா் வி.ஜி.சந்தோசம், தமிழா் கலை இலக்கிய மையத்தின் தலைவா் பாரதிசுகுமாரன், சென்னை மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் செயலா் இரா.தங்கராசு, பொருளாளா் ஜீவா.காசிநாதன், புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவா் வி.முத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com