கிருமிநாசினி தெளிக்க துரித வாகனங்கள் சேவை: முதல்வர் தொடக்கி வைத்தார்

வைரஸ் தடுப்புப் பணிகளுக்காக கிருமிநாசினி தெளித்திட 50 துரித செயல் வாகனங்களின் சேவையை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
கிருமிநாசினி தெளிக்க துரித வாகனங்கள் சேவை
கிருமிநாசினி தெளிக்க துரித வாகனங்கள் சேவை
Updated on
1 min read


சென்னை: வைரஸ் தடுப்புப் பணிகளுக்காக கிருமிநாசினி தெளித்திட 50 துரித செயல் வாகனங்களின் சேவையை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இது குறித்து தமிழக அரசு தெரிவித்திருப்பதாவது, 
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று (7.7.2020) தலைமைச் செயலகத்தில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் கரோனா வைரஸ் தடுப்புப் பணிகளுக்காக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கிருமிநாசினி தெளித்திட 50 துரித செயல் வாகனங்களின் சேவைகளை துவக்கி வைக்கும் அடையாளமாக 7 வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை வீரர்கள் கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகளுக்காக தமிழகமெங்கும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் சுமார் 3 லட்சம் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்காக வான்நோக்கி உயரும் ஏணி ஊர்திகள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், கரோனா தடுப்புப் பணிக்காக சென்னை மாநகரில் உள்ள குறுகிய சாலைகளில் கிருமி நாசினி தெளிக்கும் வகையில், காற்றழுத்த கிருமி நாசினி தெளிப்பான் பொருத்தப்பட்ட 25 இருசக்கர வாகனங்களை தமிழக முதல்வர் பழனிசாமி 3.6.2020 அன்று வழங்கினார்.

அதன் தொடர்ச்சியாக, கரோனா தடுப்புப் பணிகளுக்காக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் 3 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 50 துரித செயல் வாகனங்களின் சேவைகளை தமிழக முதல்வர் பழனிசாமி இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். 

இவ்வாகனங்களில் கிருமி நாசினி தெளித்திட தண்ணீரை பனித் திவலையாக மாற்றி பீய்ச்சியடிக்கும் தொழில்நுட்பம் கொண்ட கருவிகள் மற்றும் பேரிடர்கால மீட்பு பணிக்காக 8 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான ரப்பர் இயந்திர படகுகள் பொருத்தப்பட உள்ளன. கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் முடிவுற்ற பிறகு, இவ்வாகனங்கள் சென்னையின் குறுகிய சாலைகளில் அமைந்துள்ள வீடுகள் மற்றும் இதர கட்டடங்களில் ஏற்படும் தீயினை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும்.

இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் க. சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com