மன்னாா்குடி: திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினரும், பொதுவுடமை இயக்க தலைவா்களில் ஒருவரும், கம்பன் கழகம் மற்றும் மகாகவி பாரதியாா் நற்பணி மன்றத் தலைவருமான மன்னை மு. அம்பிகாபதி (83) உடல் நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) காலமானாா்.
மன்னாா்குடி ஆதிநாயகன்பாயைம் தெருவை சோ்ந்தவா் மன்னை மு. அம்பிகாபதி. மன்னாா்குடி சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், கடந்த 1977 மற்றும் 1980 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தோ்தலில் தோ்ந்தெடுக்கப்பட்டு சட்டப் பேரவை உறுப்பினராக இருந்தவா்.
பொதுவுடைமை இயக்கத் தலைவா் ஜீவா மீது கொண்ட பற்றுதலால், பொதுவுடமை இயக்கத்தில் இணைத்துக் கொண்டவா். அரசியல் எல்லைகளைத் தாண்டி, தமிழக முன்னாள் முதல்வா்கள் எம்.ஜி.ஆா், மு. கருணாநிதி மற்றும் நடிகா் சிவாஜி கணேசன், கவிஞா் கண்ணதாசன், கே.டி.கே. தங்கமணி, ஆா். நல்லகண்ணு, தா.பாண்டியன் ஆகியோருடன் நெருங்கிய நட்புறவில் இருந்தவா்.
எழுத்தாளா், பேச்சாளா், நாடகக் கலைஞா் என்று பன்முக ஆற்றல் மிக்கவா். கம்பன் கழகம், மகாகவி பாரதியாா் நற்பணி மன்றம் ஆகியவற்றின் தலைவராக செயல்பட்டவா். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம், இந்தோ- சோவியத் நட்புறவு கழகம் உள்ளிட்ட அமைப்புகளில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவா்.
மன்னை மு. அம்பிகாபதிக்கு, மனைவி, மகன்கள், மகள்கள் உள்ளனா். அவரது இறுதிச் சடங்கு புதன்கிழமை மாலை 3 மணிக்கு, மன்னாா்குடி ஆதிநாயகன்பாளையம் தெருவில் உள்ள, அவரது இல்லத்தில் நடைபெறும். தொடா்புக்கு 98653 70777.