புதுக்கோட்டை மாவட்டம் கே.புதுப்பட்டி காவல்துறை சரகம் போசம்பட்டி கிராமத்தில் உடையப்பன், திருநாவுக்கரசு ஆகியோருக்கிடையே உள்ளாட்சித் தேர்தல் முன்விரோதம் கடந்த சில மாதங்களாகவே இருந்துள்ளது.
திங்கள்கிழமை இரவு இரு தரப்பினரும் பரஸ்பரம் புகார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை இரு தரப்பினருக்கும் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்து கே. புதுப்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரவணன் தலைமையிலான காவல்துறையினர் அங்கு சென்றுள்ளனர்.
இரு தரப்பினரும் ஆக்ரோஷமாக அரிவாளால் வெட்டிக் கொண்டதைப் பார்த்த சரவணன், கைத்துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்டார். இதையடுத்து கலவரம் மெல்ல ஓய்ந்தது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் போசம்பட்டி கிராமத்துக்குச் சென்று பார்வையிட்டார்.
காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லும் பணிகளும் நடைபெற்று வருகிறது. சம்பவ இடத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.