புதுச்சேரியில் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். சிலைக்கு, மர்ம நபர்கள் காவித்துண்டு போர்த்திய சம்பவத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியை அடுத்த வில்லியனூர் பகுதியில் விழுப்புரம் நெடுஞ்சாலையில் எம்.ஜி.ஆர். சிலை உள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை எம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டை போர்த்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் அன்பழகன், வையாபுரி மணிகண்டன் மற்றும் அதிமுகவினர் பலர் திரண்டு போராட்டம் நடத்தினர். பின் காவித் துணியை அகற்றி மாலையிட்டு மரியாதை செலுத்தி கலைந்து சென்றனர்.
எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித் துணியை போர்த்திய சம்பவத்திற்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வியாழக்கிழமை கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிக்கை வாயிலாக தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துணி போர்த்திய சம்பவம் தமக்கு மிகுந்த மனவேதனையும், வருத்தத்தையும் தருவதாக குறிப்பிட்ட அவர்,மேலும் ”சமீபகாலத்தில் சமூகத் தொண்டாற்றிய தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துவது, களங்கப்படுத்துவது போன்ற இழிசெயல்கள் மிகுந்த வேதனையைத் தருகிறது. இந்த காட்டுமிராண்டித் தனம் கடுமையாக கண்டிக்கத்தக்கது.” என தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை இனம் கண்டு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.