
திருப்பூரில் வீடுகளிலிருந்து பீஸ்ரேட் அடிப்படையில் பணியாற்றி வரும் பெண் தொழிலாளர்களுக்கு 3 மாதங்களுக்கு தலா ரூ.7,500 நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று ஏஐடியூசி பனியன் பேக்டரி லேபர் யூனியன் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து ஏஐடியூசி பனியன் பேக்டரி லேபன் யூனியன் சார்பில் மாவட்ட ஆட்சியர் மூலமாக தமிழக முதல்வருக்கு வியாழக்கிழமை அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
திருப்பூரில் வீட்டில் இருந்த படியே பின்னலாடை நிறுவனங்களுக்காக சுமார் ஒரு லட்சம் பெண் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் துணியை மடித்துக் கொடுத்தல், பிசிறு வெட்டுதல், செக்கிங் செய்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு பீஸ் ரேட் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், பொது முடக்கம் காரணமாக கடந்த 3 மாதங்களாக வேலை இழப்பால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பொது முடக்கத்தில் அரசு தளர்வு ஏற்படுத்தியுள்ள போதிலும் இந்தத் தொழிலாளர்களுக்கு தற்போது வரையில் வேலை வழங்கப்படவில்லை. ஆகவே, இவர்களது வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு மாதம் ரூ.7,500 வீதம் 3 மாதங்களுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
திருப்பூர் மாவட்டத்தில் அமைப்புசாரா வாரியத்தின் மூலமாக 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த 8 மாதமாக ஓய்வூதியம் வழங்காததால் முதியோர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதே போல், நல வாரியத்தில் பதிவு செய்துள்ள பெரும்பாலான தொழிலாளர்களுக்கு கரோனா நிவாரண உதவித் தொகையும் வங்கிக் கணக்கிற்குச் சென்றடையவில்லை. ஆகவே, நிலுவையில் உள்ள முதியோர் ஓய்வூதியத்தைத் தொகையையும், தொழிலாளர்களுக்கான கரோனா நிவாரணத் தொகையையும் உடனடியாக வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு அளிப்பின்போது, ஏஐடியூசி மாநிலச் செயலாளர் சின்னசாமி, மாவட்ட பொதுச்செயலாளர் என்.சேகர், ஜெனரல் சங்க மாவட்டச் செயலாளர் ஜெகநாதன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் ரவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.