இளையான்குடி அருகே கிராம மக்கள் போராட்டம் எதிரொலி: சவடுமண் குவாரியில் மண் அள்ளுவது நிறுத்தம்

இளையான்குடி அருகே முத்தூர் கிராமத்தில் மக்களின் தொடர்ந்து போராட்டம் காரணமாக சவடு மண் குவாரியிலிருந்து அள்ளப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. 
இளையான்குடி அருகே கிராம மக்கள் போராட்டம் எதிரொலி: சவடுமண் குவாரியில் மண் அள்ளுவது நிறுத்தம்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே முத்தூர் கிராமத்தில் சவடு மண் குவாரியிலிருந்து ஆற்று மணல் கொள்ளை நடந்ததைத் தொடர்ந்து கிராம மக்களின் போராட்டம் காரணமாக செவ்வாய்க்கிழமை இந்த குவாரியிலிருந்து மண் அள்ளப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. 

இளையான்குடி வட்டம் சாலைக்கிராமம் அருகே முத்தூர் கிராமத்தில் 47 சென்ட் தனியார் நிலத்தில் 3 அடி ஆழத்துக்குச் சவடு மண் எடுத்து விற்பனை செய்ய அரசு நிர்வாகம் அனுமதி வழங்கியது. ஆனால் குவாரி நடத்த அனுமதி பெற்ற கும்பல் 10 ஏக்கர் நிலப்பரப்புக்கு விதிமுறைகளை மீறி 20 லிருந்து 30 அடி ஆழத்துக்கு ராட்சத பொக்லைன் இயந்திரங்களைப் பயன்படுத்தி பள்ளங்கள் தோண்டி சவடுமண்ணுக்கு கீழே உள்ள ஆற்றுமணலைக் கொள்ளையடுத்து 5 யூனிட் மணல் ரூ 60 ஆயிரத்திலிருந்து ரூ 70 ஆயிரம் வரை விற்பனை செய்து வந்தது. 

இதனால் இப்பகுதியில் நீராதாரங்கள் குறைந்து விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு குடிநீராதாரத்துக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த திங்கள்கிழமை முத்தூர் கிராம மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விவசாயிகள் சங்கத்துடன் இணைந்து குவாரியை முற்றுகையிட்டு குவாரியை ரத்து செய்யக்கோரி போராட்டம் நடத்தினர். இதையடுத்து இவர்களிடம் சமாதானம் பேசிய அரசுத்துறை அதிகாரிகள் முத்தூர் கிராமத்தில் செயல்படும் சவடுமண் குவாரியில் ஆய்வு நடத்தப்பட்டும். விதிமுறைகளை மீறி அங்கு மண் அள்ளப்பட்டிருந்தால் குவாரி உரிமம் ரத்து செய்யப்படும். 

ஆய்வு செய்யப்படும்வரை குவாரி செயல்படாது என உறுதியளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். இதைத்தொடர்ந்து முத்தூர் கிராமத்தில் சவடுமண் குவாரியிலிருந்து மண் எடுப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com