கரோனா நிவாரணம் வழங்கக் கோரி தஞ்சாவூர் மாவட்டத்தில் இடதுசாரி கட்சிகள் செவ்வாய்க்கிழமை காலை ஆர்ப்பாட்டம் நடத்தின.
ஒவ்வொரு குடும்பத்துக்கும் கரோனா நிவாரணமாக மத்திய அரசு ரூ. 7,500-ம், மாநில அரசு 5,000-ம் என மொத்தம் ரூ.12,500 வீதம் வழங்க வேண்டும். நூறு நாள் வேலையை 200 நாள்களாக அதிகரித்து, ஊதியத்தை ரூ. 700 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். சிறு, குறு வணிகர்களுக்கு வங்கி வட்டியை ரத்து செய்ய வேண்டும். இலவச மின்சாரம் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சி.பி.ஐ. (எம்.எல்) லிபரேஷன் ஆகியவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் ரயிலடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் கோ. நீலமேகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் சி. சந்திரகுமார், சி.பி.ஐ. (எம்.எல்) லிபரேஷன் கே. ராஜன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலர் என். குருசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலர் பி. கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதுபோல, மாவட்டத்தில் நூற்றுக்கும் அதிகமான இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.