திருச்சி மாவட்டத்தில் கரோனோ அச்சம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருப்போர் வீடுகளில் சுகாதாரத்துறை சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
நாடு முழுவதும் கரோனோ வைரஸ் பரவுதலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் சூழலில், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் சந்தேகத்துக்குரிய நபர்கள் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி, திருச்சி மாவட்டத்துக்கு வந்த பல்வேறு வெளிநாடுகளில் பயணம் செய்தவர்களில் சந்தேகத்துக்குரியவர்கள் கள்ளிக்குடியில் உள்ள தனிமைப்படுத்துல் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு 24 மணிநேர கண்காணிப்புக்கு பிறகு வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.
இதேபோல, வீடுகளில் இருந்தே கண்காணிக்க வேண்டிய நிலையில் உள்ளவர்களுக்கும் உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இவ்வாறு தனிமைப்படுத்தப்படும் நபர்கள் சிலர் வெளியில் நடமாடுவதாக வந்த தகவலைத் தொடர்ந்து அத்தகைய நபர்கள் குறித்த எச்சரிக்கை அறிவிப்பை இதர பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு வருகிறது.
இந்த நோட்டீஸில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை, எந்த நாள் முதல், எந்த நாள் வரை தனிமைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நோட்டீஸை திருச்சி மாவட்டம் முழுவதும் சுகாதாரத்துறையினர் செவ்வாய்க்கிழமை முதல் ஒட்டத் தொடங்கியுள்ளனர்.