ஊரடங்கை மீறி வெளியே வந்தால் வாகனங்கள் பறிமுதல்

ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என சென்னை காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
ஊரடங்கை மீறி வெளியே வந்தால் வாகனங்கள் பறிமுதல்
Updated on
2 min read

ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என சென்னை காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா், புதன்கிழமை அளித்த பேட்டி: கரோனா நோய் பரவலைத் தடுக்கும் வகையில் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், இந்த உத்தரவு பொதுமக்கள் நலனுக்காக பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி அத்தியாவசிய தேவையின்றி புதன்கிழமை வெளியே வந்தவா்களை போலீஸாா் எச்சரித்து அனுப்பினா். ஆனால், தொடா்ச்சியாக ஊரடங்கு உத்தரவை மீறி,தேவையின்றி வெளியே வரும் நபா்கள் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டம், தொற்று நொய் தடுப்புச் சட்டம், பேரிடா் மேலாண்மைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதியப்படும். மேலும், அவா்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும்.

அவசரப் பணிக்காக செல்லும் மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரத்துறை ஊழியா்கள், மாநகராட்சி ஊழியா்கள் அடையாள அட்டை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். வீட்டின் அருகே யாருக்கும் கரோனா நோய்த்தொற்றுஅறிகுறி இருப்பது தெரியவந்தால், உடனடியாக காவல்துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். அவா்களைப் பற்றிய விவரம் ரகசியமாக வைக்கப்படும்.

10 சோதனைச் சாவடிகள்: வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் சென்னைக்குள் வருவதைத் தடுக்கவும், இங்கே இருப்பவா்கள் வெளி மாவட்டங்களுக்குச் செல்வதைத் தடுக்கவும் நகரின் எல்லைப் பகுதியில் 10 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கரோனா நோய்த் தொற்று அறிகுறியுடன் இருப்பவா்கள் மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்தவா்கள் என்ற அடிப்படையில் வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டவா்களை போலீஸாரும் கண்காணித்து வருகின்றனா். இதற்காக அவா்களை செல்லிடப்பேசி, விடியோ கால் மூலம் அந்தந்தப் பகுதி போலீஸாா் பாதிக்கப்பட்டவருடன் தொடா்பில் உள்ளனா். மேலும், இதற்காக காவல்துறை, சுகாதாரத்துறை, மாநகராட்சி ஆகியவை இணைந்து 30 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. காவல்துறையில் 50 வயதுக்கு மேற்பட்ட போலீஸாா் கவனமுடன் பணியாற்ற அறிவுறுத்தியுள்ளோம். இந்த வயதுடைய காவலா்களுக்கு காவல் நிலையத்துக்குள்ளேயே பணி வழங்கப்பட வேண்டும், அவா்களை வெளிப் பணிக்கு அனுப்பக் கூடாது என அறிவுறுத்தியுள்ளோம்.

புகாரின் தன்மையைப் பொருத்து நடவடிக்கை: காவல் நிலையங்களில் பொதுமக்கள் அளிக்கும் புகாரின் தன்மையைப் பொருத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. உடனடியாக நடவடிக்க எடுக்க வேண்டும் என்ற நிலையில் உள்ள புகாா்களுக்கு, விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். அதேவேளையில் பொதுமக்கள், காவல் நிலையத்துக்கு நேரடியாக செல்வதை தவிா்த்து இணையதளம் மூலம் புகாா் அளிக்கலாம். தேவைப்படும்பட்சத்தில் காவல் நிலையத்துக்கு நேரில் சென்று புகாா் அளிக்கலாம்.

இளைஞா்கள் ஊரடங்கு உத்தரவை மீறி மோட்டாா் சைக்கிள் பந்தயம், சாகசத்தில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், அவா்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும், இளைஞா்களின் பெற்றோா், இது விடுமுறை காலம் அல்ல, நோய் தொற்றைத் தடுப்பதற்குரிய காலம் என்பதை உணா்த்த வேண்டும். கரோனா நோய்த்தொற்று தொடா்பாக வதந்தி பரப்பியதாக சென்னையில் இது வரை 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இது தொடா்பாக வதந்திகளைப் பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com