சென்னை: கரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் மறுஉத்தரவு வரும் வரை வட்டி வசூலிக்கத் தடை விதித்து தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவும், இதர உத்தரவுகளும் நீட்டிக்கப்படுவதாக அறிவித்த தமிழக முதல்வர், ஊரடங்கு நடவடிக்கையால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
தமிழக முதல்வர் பழனிசாமி இன்று (26.3.2020) கரோனா நோய்த் தடுப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி மூலம் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதில், பல கிராமங்களிலும், நகரங்களிலும் தனியார் வங்கிகள், சிறிய நிதி நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள் ஆகியவை தினசரி / வாராந்திர / மாத வட்டி மற்றும் அசலை வசூல் செய்கின்றன.
தற்போது, ஊரடங்கு உத்தரவினால் யாரும் வேலைக்குச் செல்ல இயலாத நிலையில், இது போன்ற பண வசூலை உடனடியாக, மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்க வேண்டும். இந்த உத்தரவினை மீறுபவர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கைகள் தொடரப்படும் என எச்சரிக்கப்படுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
தொழில்கள் முடங்கியிருப்பதால், வட்டி செலுத்த முடியாமல் தவிக்கும் பொதுமக்களுக்கு தமிழக முதல்வரின் அறிவிப்பு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.