மூன்று காரணங்களுக்கு மட்டுமே அவசர பாஸ்: காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன்

மூன்று காரணங்களுக்கு மட்டுமே அவசர பாஸ்: காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன்

தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், பொதுமக்கள் இறப்பு, திருமணம், மருத்துவ தேவைகளுக்காக மட்டுமே அவசரப் பாஸ் வழங்கப்படும் என்று சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் கூறியுள்ளார
Published on


சென்னை: தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், பொதுமக்கள் இறப்பு, திருமணம், மருத்துவ தேவைகளுக்காக மட்டுமே அவசரப் பாஸ் வழங்கப்படும் என்று சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் கூறியுள்ளார்.

சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் கூறியதாவது,  மக்களின் நன்மைக்காகத்தான் யாரும் வெளியே செல்லக் கூடாது என்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அப்படி இருக்கையில், சென்னையில் இருந்து வெளி மாவட்டம் அல்லது வெளி மாநிலங்கள் செல்ல இறப்பு, திருமணம், மருத்துவ சிகிச்சை போன்ற 3 காரணங்களுக்காக மட்டுமே அவசரப் பாஸ் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களை நடத்தவும், திருமணத்தில் பங்கேற்கச் செல்லவும் அவசர பாஸ் வழங்கப்படும். அதேப்போல, மருத்துவச் சிகிச்சைக்காகச் செல்லவும் பொதுமக்களுக்கு அவசரப் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

மேலும், வாட்ஸ்-அப் மற்றும் மின்னஞ்சல் வாயிலாக திருமணம், இறப்பு, மருத்துவச் சிகிச்சை மட்டுமல்லாமல் பல்வேறு காரணங்களைக் கூறி ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் வந்து சேருகின்றன. இவற்றில், அவசரப் பயணங்களுக்கு மட்டுமே உடனடியாக பரிசீலித்து அவசரப் பயணப் பாஸ் அளிக்கிறோம். இதில்லாமல் வேறு பல காரணங்களுக்காக வரும் விண்ணப்பங்களை மெதுவாக பரிசீலனை செய்து அவசர பாஸ் வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com