

காரைக்கால் : கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான பணியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கு கடலோரக் காவல் படையினர் கப்பல் விளக்குகளை ஒளிரச் செய்யும் நன்றி தெரிவித்த நிகழ்வு காரைக்கால் கடல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடத்தப்பட்டது.
கரோனாவுக்கு எதிராக பணியாற்றும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நடவடிக்கைகளில் முப்படைகளும் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டது. காரைக்காலில் கமாண்டிங் அலுவலகம் அமைத்து, காரைக்கால் துறைமுகத்திலிருந்து ரோந்துக் கப்பல் போக்குவரத்து மேற்கொண்டுள்ள இந்திய கடலோரக் காவல்படையும் மருத்துவப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வை நடத்தியது.
இதையொட்டி கடலோரக் காவல்படைக்கு சொந்தமான ராணி துர்காவதி என்கிற ரோந்துக் கப்பல், ஞாயிற்றுக்கிழமை இரவு காரைக்கால் கடல் பகுதியில் கரையிலிருந்து 2 நாட்டிக்கல் மைல் தொலைவில் நிறுத்தப்பட்டு, கப்பலின் அனைத்து விளக்குகளையும் ஒளிரச் செய்தது. கப்பலில் இருந்து ஒளிரும் பிஸ்டல் இயக்கப்பட்டது. தொலைவிலிருந்து பார்த்தவர்களுக்கு இது வாண வேடிக்கை போன்று காட்சியளித்தது.
காரைக்கால் கடற்கரையில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத வகையில் சீல் வைக்கப்பட்டதால், இதனை மக்கள் நேரில் காணமுடியவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.