கோயம்பேடு சந்தையில் இருந்து கடலூர் சென்ற மேலும் 68 பேருக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு சந்தையில் பணியாற்றி கடலூர் மாவட்டம் திரும்பிய சுமார் 800க்கும் மேற்பட்ட பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு படிப்படியாக முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இதில், நேற்று கோயம்பேட்டில் இருந்து சென்ற 107 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், இன்று மேலும் 68 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கடலூரில் கோயம்பேடு சந்தை மூலமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 197 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் 810 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், இதில் 217 பேருக்கு முடிவுகள் வரவேண்டியுள்ளது.
ஏற்கெனவே கரோனா பாதிக்கப்பட்டு 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் தற்போது கடலூரில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 202 ஆக உள்ளது.
இன்று 68 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடலூரில் மொத்தமாக பாதிப்பு எண்ணிக்கை 228 ஆக அதிகரித்துள்ளது. இதில் 26 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேற்குறிப்பிட்ட தகவலை தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன் தெரிவித்துள்ளார்.