காவலர்கள் தனிமைப்படுத்தப்பட்டதால் திருநள்ளாறு காவல்நிலையம் மூடல் 

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு பகுதி சுரக்குடியை சேர்ந்த 37 வயது ஓட்டுநருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தீநுண்மி தொற்று உறுதியானதையொட்டி
காவலர்கள் தனிமைப்படுத்தப்பட்டதால் திருநள்ளாறு காவல்நிலையம் மூடல் 
Published on
Updated on
1 min read

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு பகுதி சுரக்குடியை சேர்ந்த 37 வயது ஓட்டுநருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தீநுண்மி தொற்று உறுதியானதையொட்டி காரைக்கால் அரசு பொதுமருத்துவனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு வழக்கு ஒன்றில் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். சிறையிலடைப்பதற்காக மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டபோது கரோனா உறுதி செய்யப்பட்டது. இவரை திருநள்ளாறு காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்ளிட்ட காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதால் ஆய்வாளர் உள்ளிட்ட 32 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

ஓட்டுநரின் வீட்டு நபர்கள், அவருடன் தொடர்பில் இருந்தோர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, கரோனா தொற்றை கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருநள்ளாறு காவல்நிலையத்தார் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டதால், திங்கள்கிழமை காலை முதல் காவல்நிலையத்தை மாவட்ட நிர்வாகம், காவல்துறை நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி மூடப்பட்டது.

 காவல்நிலையப் பணியை திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயில் கோபுரம் அருகே உள்ள போலீஸ் பூத்தில் இருந்தவாறு மேற்கொள்ளப்படுகிறது. திருநள்ளாறு காவல்நிலையப் பணியை மேற்கொள்ள மாவட்டத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த காவல் அதிகாரிகள், காவலர்கள் பொறுப்புப் பணியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com