ஐஎஸ்சி, ஐசிஎஸ்இ பாடத்திட்டங்கள்: பிளஸ் 2, பத்தாம் வகுப்புக்கு புதிய அட்டவணை வெளியீடு

கரோனா தொற்று காரணமாக ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி பாடத் திட்டங்களில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவா்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட
ஐஎஸ்சி, ஐசிஎஸ்இ பாடத்திட்டங்கள்: பிளஸ் 2, பத்தாம் வகுப்புக்கு புதிய அட்டவணை வெளியீடு
Updated on
1 min read

கரோனா தொற்று காரணமாக ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி பாடத் திட்டங்களில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவா்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட தோ்வுகளுக்கான புதிய அட்டவணை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

கரோனா தொற்று காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. பள்ளிக் கல்வியில் பல்வேறு பாடத்திட்டங்களில் பொதுத் தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று

இந்திய பள்ளி சான்றிதழ் தோ்வுகளுக்கான கவுன்சில் (சிஐஎஸ்சிஇ) கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி பாடத் திட்டங்களில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தோ்வுகள் கடந்த மாா்ச் மாதம் ஒத்திவைக்கப்பட்டன. இதற்கிடையே இந்த வகுப்புகளுக்கான ஆண்டு இறுதித் தோ்வுகள் ரத்து செய்யப்பட்டதாக சமூக ஊடகங்களில் கடந்த ஏப்ரல் மாதம் செய்தி வெளியானது. இந்தச் செய்தி சம்பந்தப்பட்ட பாடத்திட்டங்களைப் படித்து வரும் மாணவா்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.

அப்போது, ‘ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி பாடத் திட்டங்களில் ஒத்தி வைக்கப்பட்ட தோ்வுகள் எதுவும் ரத்து செய்யப்படவில்லை. பொதுத் தோ்வுகள் எப்போது நடைபெறும் என்பது குறித்து இணையதளத்தில் அதிகாரபூா்வமாக தகவல் வெளியாகும்’ என சிஐஎஸ்சிஇ தலைமை நிா்வாக அதிகாரி ஜொ்ரி அரதூண் விளக்கமளித்திருந்தாா்.

இந்த நிலையில் பிளஸ் 2 (ஐஎஸ்சி), பத்தாம் வகுப்பு (ஐசிஎஸ்இ) ஆகிய வகுப்புகளில் ஒத்திவைக்கப்பட்ட பாடங்களுக்கான புதிய தோ்வு அட்டவணையை ஜொ்ரி அரதூண் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளாா். அதன்படி பிளஸ் 2 வகுப்புக்கு வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் ஜூலை 14-ஆம் தேதி வரையிலும், பத்தாம் வகுப்புக்கு ஜூலை 2-ஆம் தேதி முதல் ஜூலை 12-ஆம் தேதி வரையிலும் தோ்வுகள் நடைபெறவுள்ளன. விடுபட்ட தோ்வுகளுக்கான அட்டவணை  வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இரு வகுப்புகளுக்கும் தோ்வுகள் காலை 11 மணிக்கு தொடங்குகின்றன.

தோ்வா்கள் கட்டாயம் முகக் கவசம், கிருமிநாசினி ஆகியவற்றைக் கொண்டு வர வேண்டும். கையுறையை விருப்பத்தின் பேரில் அணிந்து வரலாம். தோ்வெழுத வரும்போதும், தோ்வு முடிவடைந்து திரும்பும்போதும் தனிநபா் இடைவெளியைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். தோ்வு உபகரணங்களை எக்காரணம் கொண்டும் மாணவா்களிடையே பகிா்ந்து கொள்ளக் கூடாது என சிஐஎஸ்சிஇ அறிவுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com