வாழப்பாடி பகுதியில் வாத்துக்குஞ்சுகள் விற்பனை அமோகம்

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த வியாபாரிகள் முகாமிட்டு, வாத்துக் குஞ்சுகள் விற்பனை செய்து வருகின்றனர்
வாழப்பாடியில் வாத்துக்குஞ்சுகள் விற்பனை செய்யும் தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி சிறு வியாபாரி மாதவன் (55).
வாழப்பாடியில் வாத்துக்குஞ்சுகள் விற்பனை செய்யும் தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி சிறு வியாபாரி மாதவன் (55).
Updated on
1 min read

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த வியாபாரிகள் முகாமிட்டு, வாத்துக் குஞ்சுகள் விற்பனை செய்து வருகின்றனர். சோதனை முயற்சியாகவும், பொழுதுபோக்கிற்காகவும் வாத்துக் குஞ்சுகளை வாங்கி வளர்ப்பதில் மக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.

சேலம் மாவட்டம், வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் பெரும்பாலானோர் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். வருவாய் ஈட்டிக் கொடுக்கும் உப தொழிலாக ஆடுகள், கறவை மாடுகள், கோழிகள் வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

வாழப்பாடி பகுதியில் பெரும்பாலான நீரோடை, ஆறுகள், குளம், குட்டை, ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நீர்வரத்தின்றி வறண்டு கிடக்கின்றன. மழைக்காலங்களில் மட்டும், அவ்வப்போது நீர்நிலைகளில் தண்ணீர் தேங்குகிறது. ஓரிரு மாதங்களில் மீண்டும் நீர்நிலைகள் வறண்டு விடுகின்றன.

இதனால்,  தண்ணீரில் வாழும் பறவை இனமான வாத்து வளர்ப்பு தொழிலில் இதுவரை வாழப்பாடி பகுதி கிராம மக்கள் ஈடுபடவில்லை. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சிறு வியாபாரிகள், வாத்துக் குஞ்சுகளை கொண்டுவந்து, கடந்த சில தினங்களாக வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கால்நடையாகச் சென்று, கூவி விற்பனை செய்து வருகின்றனர்.

வாத்து வளர்ப்புக்கு ஏற்ற நீர் வளமும், சீதோஷ்ணமும் இல்லாத நிலையிலும், ஒரு ஜோடி ரூ. 100க்கு விற்பனை செய்யப்படும் வாத்துக் குஞ்சுகளை வாங்கி பொழுதுபோக்கிற்காக வளர்ப்பதில் வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராம மக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.

வாழப்பாடி பகுதியில் எதிர்பார்த்ததைவிட வாத்துக் குஞ்சுகள் விற்பனை அமோகமாக நடைபெறுவதால், வாழப்பாடி பகுதியில் முகாமிட்டுள்ள தருமபுரி மாவட்ட சிறு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பகுதியைச் சேர்ந்த வாத்து குஞ்சுகள் விற்பனை செய்யும் வியாபாரி மாதவன்(55). கூறியதாவது:

தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து, பண்ணையில் வாத்துக் குஞ்சுகளை கொள்முதல் செய்து கொண்டு வந்து, கடந்த சில தினங்களாக வாழப்பாடி பகுதியில் விற்பனை செய்து வருகிறோம். இப்பகுதியில் வாத்து வளர்ப்புக்கேற்ற நீர்வளம், சூழ்நிலை இல்லாத நிலையிலும், பொழுதுபோக்கிற்காகவும், சோதனை முயற்சியாகவும் ஏராளமானோர் வாத்துக் குஞ்சுகளை வாங்கி  வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனால், எதிர்பார்த்ததைவிட விட விற்பனை அதிகரித்துள்ளது. இருப்பிலுள்ள வாத்துக்குஞ்சுகள் அனைத்தும், ஒரு வாரத்திற்குள் விற்றுத் தீரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com