கரூரில் பாஜகவின் வேல் யாத்திரை பொதுக்கூட்டம் பிற்பகல் 1 மணிக்குத் துவங்கியது. மாவட்ட தலைவர் கே.சிவசாமி வரவேற்றார்.
முன்னதாக கரூர் திருக்காம்புலியூர் ரவுண்டானா பகுதியில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன், பொதுச்செயலாளர் இராம.சீனிவாசன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு மகளிரணியினர் மற்றும் கட்சியினர் முளைப்பாரி எடுத்து வந்து வரவேற்றனர்.
தொடர்ந்து கரூர் பேரூந்து நிலையம் எதிரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய மாநில பொதுச்செயலாளர் இராம.சீனிவாசன், இந்த யாத்திரை சட்டசபையில் பாஜகவினரை அமரச்செய்யும் யாத்திரையாக அமையும் என்று கூறினார்.
முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேசும்போது, இன்று மிக முக்கியமான நாள். முருகனை அவமதிப்பு செய்தவர்களுக்கு எதிராக இந்தப் போராட்டம் நடக்கிறது. இனி தமிழகத்தில் யாரும் இந்துக்களுக்கு எதிராக பேசக்கூடாது. திமுக தொடர்ந்து தெய்வங்களை அவமானப் படுத்திவருகிறது என்றார்.
நிகழ்ச்சியில் மாநில தலைவர் எல்.முருகன் பேசும்போது, கந்தசஷ்டி கவசத்தை ஆபாசமாக கருப்பர் கூட்டம் பேசியது. அந்த கருப்பர் கூட்டத்தை இயக்குவது ஸ்டாலின். கரோனா காலத்தில் பலர் வீட்டுக்குள் முடங்கி இருந்த நிலையில் பாஜவினர் முகக்கவசம், கிருமிநாசினி வழங்கி நோய் தோற்றில் இருந்து மக்களை காப்பாறினர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கவே இந்த யாத்திரை என்றார்.
பின்னர் வேல்யாத்திரைக்கு முயன்ற பாஜகவின் தலைவர் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.