திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா பந்தல்கால் முகூர்த்தம்
திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா பந்தல்கால் முகூர்த்தம்

திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா பந்தல்கால் முகூர்த்தம்

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி பந்தல்கால் முகூர்த்தம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


காரைக்கால் : திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி பந்தல்கால் முகூர்த்தம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாற்றில் ஸ்ரீ பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேசுவரர் கோவிலில் ஸ்ரீ சனீஸ்வர பகவான் தனி சன்னதிகொண்டு அனுக்கிரஹ மூர்த்தியாக அருள் பாலிக்கிறார்.

சனிப்பெயர்ச்சி இரண்டரை ஆண்டுகளுக்கொரு முறை நடைபெறும்போது, இக்கோவிலில் திரளான பக்தர்கள் நாடெங்குமிருந்து வந்து கலந்துகொள்வர்.

வரும் டிசம்பர் மாதம் 27-ஆம் தேதி காலை 5.22 மணிக்கு தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு சனிபகவான் பெயர்ச்சியடைவதையொட்டி, இக்கோவிலில் ஸ்ரீ சனீஸ்வரபகவானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்து  சிறப்பு ஆராதனை செய்யப்படும்.

சனிப்பெயர்ச்சி நாள் முதல் தொடர்ந்து 2 மாதங்கள் சனிக்கிழமைகளில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்வர்.  சனிப்பெயர்ச்சி விழா தொடங்குவதற்ககாக பூர்வாங்கப் பணிகள் தொடக்கமாக பந்தல்கால் முகூர்த்தம் கோவில் வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிவாச்சாரியார்கள் பந்தல்காலுக்கு அபிஷேக, ஆராதனைகளை செய்து வளாகத்தில் கால் நடப்பட்டது. 

இந்நிகழ்வில், புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன், மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா, துணை ஆட்சியரும், கோயில் நிர்வாக அதிகாரியுமான எம்.ஆதர்ஷ், தருமபுர ஆதீன கட்டளை விசாரணைப் பிரதிநிதி கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் நிறைவில் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறுகையில், வழக்கமாக சனிப்பெயர்ச்சி விழாவுக்கு முன்பாக செய்யக்கூடிய பணிகள் போன்று நிகழாண்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. கரோனா தொற்றுள்ள காலமாக இருப்பதால், கரோனா பரவல் தடுப்பு விதிகளுக்குட்பட்டு சனிப்பெயர்ச்சி நாளில் தரிசனத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.

சிறப்பு ரயில், பேருந்து போக்குவரத்துகளுக்கு ஏற்பாடு செய்யப்படும். நளன் தீர்த்தக் குளத்தில் பக்தர்கள் நீராடவும், பக்தர்களுக்கான குடிநீர், உணவு, கழிப்பறை வசதிகள் உள்ளிட்டவை சிறந்த முறையில் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

காரைக்கால் மாவட்ட நிர்வாகம் அனைத்து வசதிகளையும் பக்தர்களுக்காக செய்துத்தரும். புதுச்சேரி முதல்வர், அமைச்சர்கள், அரசு செயலர்கள், காவல் உயர் அதிகாரிகள் திருநள்ளாறு வந்து முன்னேற்பாடுகளை ஆய்வு செய்து இறுதி வடிவம் கொடுப்பார்கள் என்றார் அமைச்சர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com