கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் ஓய்வு பெற்ற அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் சனிக்கிழமை தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் சி.எம்.எஸ். நகரை சேர்ந்தவர் மருத்துவர் திருமலை ராஜ் (80). இவர் கண், காது, மூக்கு, தொண்டை சிகிச்சை நிபுணர். மேலும் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
இவருக்கு இரண்டு மகன்கள். இவர்களுக்கு திருமணமாகி ஒருவர் அமெரிக்காவிலும் மற்றொருவர் கேரளத்திலும் வசித்து வருகின்றனர்.
தற்போது மருத்துவர் திருமலை ராஜ், அவரது மனைவியுடன் தனியாக வசித்து வருகிறார்.
சனிக்கிழமை காலை அவரது வீட்டின் அருகே புளியந்தோப்பு பகுதியில் ஒரு மரத்தின் அடியில் கீழே அமர்ந்தவாறு திருமலைராஜ் மயங்கிக் கிடந்துள்ளார்.
அந்த வழியாக கூலி வேலைக்குச் சென்ற தொழிலாளர்கள் இவரை பார்த்து அருகில் செல்லும் போது இரண்டு கையிலும் கத்தியால் கிழித்து ரத்தம் அதிகமாக வெளியேறிய நிலையில் கிடந்துள்ளார்.
அருகில் உள்ளவர்கள் மருத்துவரை அவசர வாகனம் மூலம் கம்பம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதித்தனர்.