நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 காசுகள் உயர்ந்து ரூ.5.25-ஆக சனிக்கிழமை நிர்ணயம் செய்யப்பட்டது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் மருத்துவர் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. புரட்டாசி மாதம் என்ற போதும் மக்களிடையே முட்டை நுகர்வு அதிகரித்து வருவதும், மற்ற மண்டலங்களில் விலை தொடர்ந்து உயர்வதாலும், கரோனா நோய்த் தடுப்புக்கான உணவில் முட்டை முக்கிய பங்கு வகிப்பதாலும் அவற்றின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மேலும் உற்பத்தி குறைந்து தேவை அதிகரித்துள்ளதால் விலையில் மாற்றம் செய்யப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. அதனடிப்படையில் முட்டை விலை 20 காசுகள் உயர்த்தப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் இதுவரை இல்லாத அதிகபட்ச விலையாக ரூ.5.25 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் மேலும் விலை உயர்வு அமலுக்கு வரலாம் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 20 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.5.05-லிருந்து ரூ.5.25-ஆக நிர்ணயிக்கப்பட்டது. பண்ணையாளர்கள் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப முட்டைகளை விற்பனை செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதே போல் பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒரங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முட்டைக் கோழி விலை ரூ.135-ஆகவும், கறிக்கோழி விலை ரூ.94-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.