சீர்காழி: நாகை மாவட்டம் சீர்காழி அருகே மேலச்சாலை கிராமத்தில் சாலை ஓரம் அமைந்துள்ள வாய்க்காலில் கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்தில் காரில் பயணித்த 4 சிறுவர்கள் உள்பட 8 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையை பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் வேளாங்கண்ணிக்கு செல்ல முடிவெடுத்து தனது குடும்பத்தினருடன் தனது காரில் சென்றுள்ளார். அப்போது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கார் மேலச்சாலை கிராமம் அருகே சென்றுகொண்டிருந்த போது, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த தடுப்பில் மோதி அருகிலிருந்த வாய்க்காலில் தலைகுப்புற கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சீர்காழி அருகே சாலை ஓரம் அமைந்துள்ள வாய்க்காலில் தலைகுப்புற கவிழ்ந்துள்ள காரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஜேசிபி இயந்திரம்.
உடனடியாக, அருகில் பள்ளிவாசலில் தொழுகையில் இருந்தவர்கள் விபத்துக்குள்ளான இடத்திற்குச் சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தில் 4 சிறுவர்கள் உட்பட 8 பேர் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
இதுதொடர்பாக வைதீஸ்வரன்கோவில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் தற்பொழுது மேலச்சாலை பகுதியில் நான்கு வழி சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருவதாலும். சாலையோர தடுப்பு சுவர் தரமானதாக கட்டப்படாததாலும் கார் கட்டையில் மோதியும், தடுக்கப்படாமல் வாய்க்காலில் விழுந்து விபத்துக்குள்ளானதாக அருகிலிருந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.